கேரளாவில் இருந்து நெல்லைக்கு வந்த கோழி கழிவு: மக்கள் திரண்டதால் லாரி டிரைவர் ஓட்டம்
நெல்லை: கேரளாவில் இருந்து பட்டப்பகலில் கோழி கழிவுகளை ஏற்றி வந்த லாரியை நெல்லையில் பொதுமக்கள் முற்றுகையிட்டதால் லாரி டிரைவர் ஓட்டம் பிடித்தார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கேரளாவில் இருந்து கோழி கழிவுப் பொருட்கள் அவ்வப்போது சட்டவிரோதமாக லாரிகளில் தமிழகத்திற்கு கொண்டு வந்து கொட்டப்படுகிறது, சில நேரங்களில் இவை
நெல்லை, குமரி மாவட்டங்களில் ஆள் நடமாட்டம் இல்லாத மற்றும் நான்கு வழி சாலையோரம் கொட்டப்படுவதால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. இதனால் இப்படி கேரளாவில் இருந்து சட்டவிரோதமாக கோழி இறைச்சி கழிவுகளை ஏற்றி வரும் லாரிகளை தடுத்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இருப்பினும் போதிய கண்காணிப்பு தொடர்ந்து இல்லாததால் அத்துமீறல் தொடர்ந்து நடந்து வருகிறது. இந்த நிலையில் பட்டப்பகலிலேயே கேரளாவில் இருந்து இறைச்சி கழிவுகளை ஏற்றிக் கொண்டு ஒரு லாரி நெல்லையை கடந்து தூத்துக்குடி நோக்கி சென்று கொண்டிருந்தது. பாளையை அடுத்துள்ள பாறைகுளம் அருகே சென்ற போது திடீரென லாரியின் டயர் பஞ்சராகியது. லாரி நின்ற பகுதியில் கடும் தூர்நாற்றம் வீசியதுடன் அதில் இருந்து கழிவு ரத்தம் சாலையில் வழிந்தோடியது. இதனால் அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் லாரி அருகே திரண்டு வந்தனர்.
பொதுமக்கள் திரண்டு வருவதை பார்த்த லாரி டிரைவர் பின்புறமாக குதித்து தப்பி ஓடினார். இது குறித்து அப்பகுதி மக்கள் போலீசாருககு தகவல் தெரிவித்தனர். லாரி வந்த பகுதியில் பல சோதனைச் சாவடிகள் உள்ளன. அவற்றை கடந்து லாரி எப்படி வந்தது என்பது புரியாத புதிராக இருக்கிறது. கேரளாவில் இருந்து பட்டப்பகலிலேயே பல சோதனைச் சாவடிகளை கடந்து லாரியில் கோழி கழிவுகளை கொண்டு வந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.