பெண் போலீசை லாரி ஏற்றிக் கொல்ல முயற்சி: டிரைவர் கைது, வாகனம் பறிமுதல்
நாகர்கோவில்: நாகர்கோவில் அருகே வாகன சோதனையின்போது பெண் சப்-இன்ஸ்பெக்டரை லாரி ஏற்றிக் கொல்ல முயன்ற டிரைவரை போலீசார் கைது செய்தனர. தப்பி ஓடிய இன்னொருவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.
நாகர்கோவில் அருகே கொல்லங்கோடு பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் மெர்சி ரமணிபாய் தலைமையிலான போலீசார் காக்காவிளை பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த லாரி ஒன்றை போலீசார் தடுத்து நிறுத்தினார்கள். ஆனால் டிரைவர் லாரியை நிறுத்தாமல் மெர்சி ரமணிபாய் மற்றும் போலீசார் மீது மோதுவதுபோல் வேகமாக வந்தார்.
உஷாரான போலீசார் சற்று விலகிக் கொண்டனர். இதனால் அவர்கள் காயமின்றி உயிர் தப்பினார்கள். இதையடுத்து சந்தேகம் அடைந்த போலீசார் லாரியை துரத்திப் பிடித்தனர். லாரியில் இருந்த ஒருவர் தப்பியோடினார். டிரைவரை போலீசார் பிடித்தனர். அவரிடம் விசாரணை நடத்தியபோது, அவர் அடைக்காகுழியைச் சேர்ந்த சத்தியநேசன் என்பது தெரிய வந்தது. போலீசார் அவரை கைது செய்தனர்.
லாரியை சோதனை செய்தபோது அதில் பாறை பொடி இருந்தது. இதையடுத்து போலீசார் லாரியை பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட லாரியை கொல்லங்கோடு காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். கைது செய்யப்பட்ட சத்தியநேசனிடம் தப்பியோடிய நபர் யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தினார்கள். விசாரணையில், தப்பியோடியவர் சூரியகோட்டையைச் சேர்ந்த அஜிகுமார் என்பது தெரிய வந்தது. போலீசார் அவரை தேடி வருகிறார்கள்.
இந்த சம்பவம் குறித்து சப்-இன்ஸ்பெக்டர் மெர்சி ரமணிபாய் கொடுத்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் முத்துராமன் வழக்குப்பதிவு செய்துள்ளார். கைது செய்யப்பட்ட சத்தியநேசன், தப்பியோடிய அஜிகுமார் மீது கொலை முயற்சி உள்பட 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.