”புல்” போதையில் பால் லாரி ஓட்டிய டிரைவர் – ஐந்து நாள் உள்ளே தூக்கி போட்ட போலீசார்!
சேலம்: சேலத்தில் குடி போதையில் லாரி ஓட்டிய ஐந்து நாள் சிறை தண்டனை அளிக்கப்பட்டுள்ளது.
சேலம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சக்திவேல் உத்தரவுப்படி நெடுஞ்சாலைகளில் செல்லும் வாகன ஓட்டிகள் மது அருந்தி உள்ளனரா என்பது குறித்த சோதனை ஆத்தூர் பகுதியில் நடந்தது.
ஆத்தூர் நகர போக்குவரத்து பிரிவு இன்ஸ்பெக்டர் சகாதேவன் மற்றும் போலீஸார், சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது, சேலத்திலிருந்து சென்னைக்குச் சென்ற ஒரு தனியார் பால் டேங்கர் லாரி டிரைவர் குடிபோதையில் லாரியை ஓட்டி வந்தது தெரியவந்தது. அவரிடம் போலீசார் மேற்கொண்ட விசாரணையில், அவர் ஆத்தூர் அருகிலுள்ள புது உடையம்பட்டியை சேர்ந்த ஜெயக்குமார் என்பது தெரியவந்தது.
குடிபோதையில் லாரி ஓட்டி வந்த டிரைவர் ஜெயக்குமார் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை ஆத்தூர் முதலாவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
வழக்கை விசாரித்த நீதிபதி வேலரஸ் போதையில் லாரி ஓட்டிவந்த டிரைவர் ஜெயக்குமாருக்கு ஐந்து நாள் சிறை தண்டனையும், ரூபாய் 1,700 அபராதம் விதித்து உத்தரவிட்டார்.