விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு.. ஏப்ரல் 25-ல் தமிழகம் முழுவதும் லாரிகள் ஓடாது!
விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவாக நடத்தப்படும் முழு அடைப்பு போராட்டத்திற்கு லாரி உரிமையாளர்கள் சங்கம் ஆதரவு தெரிவித்துள்ளது.
சென்னை: விவசாயிகளுக்கு ஆதரவாக நடைபெறும் முழு அடைப்புப் போராட்டத்தையொட்டி வரும் 25-ந் தேதி தமிழகம் முழுவதும் லாரிகள் ஓடாது என்று லாரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் உள்ள விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் தமிழக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவாக திமுக உள்ளிட்ட அனைத்துக் கட்சிகள், தொழிற்சங்கங்கள், காவிரி டெல்டா விவசாயிகள் சங்கம் சார்பில் ஏப்ரல் 25-ந் தேதி போராட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
லாரிகள் ஓடாது
இந்த முழு அடைப்பு போராட்டத்திற்கு லாரி உரிமையாளர்கள் சங்கம் ஆதரவு அளித்துள்ளது. அன்றைய தினம் லாரிகள் ஓடாது என லாரி உரிமையாளர் சங்கத்தின் தலைவர் குமாரசாமி கூறியுள்ளார். டெல்லியில் 40 நாட்களாக போராட்டம் நடத்திவரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து நடைபெற உள்ள இந்தப் போராட்டத்திற்கு லாரி உரிமையாளர்கள் சங்கமும் ஆதரவு தெரிவிக்கிறது.
மணல் லாரிகளும் ஓடாது
தமிழகம் முழுவதும் நடைபெற உள்ள முழு அடைப்பு போராட்டத்திற்கு ஆதரவாக 55 ஆயிரம் மணல் லாரிகள் ஓடாது என மணல் லாரி உரிமையாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் யுவராஜ் கூறி உள்ளார்.
சினிமா காட்சிகள் ரத்து
அதே போன்று சினிமா காட்சிகளும் ஏப்ரல் 25ம் தேதியன்று ரத்து செய்யப்பட்டுள்ளதாக தியேட்டர் உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. விவசாயிகளுக்கு ஆதரவாக அன்றைய ஒரு நாள் மட்டும் சினிமா காட்சிகள் ரத்து செய்யப்படுகிறது.
வணிகர் சங்கம் ஆதரவு
முன்னதாக, முழுஅடைப்பிற்கு ஆதரவளிப்பதாக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர் விக்ரமராஜா அறிவித்தார். இதே போன்று சென்னை கோயம்பேடு வியாபாரிகள் சங்கமும் முழு அடைப்பிற்கு அதரவு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.