அன்புச்சுவரில் குவிந்த துணிகள்.. நன்றி தெரிவித்த நெல்லை ஆட்சியர்!
நெல்லையில் அமைக்கப்பட்டுள்ள அன்புச்சுவரில் ஏராளமான துணிகள் குவிந்துள்ளன.
நெல்லை: அன்புச்சுவரில் ஏராளமான துணிகள் குவிந்துள்ளன.
தேவையற்ற பொருட்களை, தேவையுள்ளவர்களுக்கு கொடுத்து உதவும் வகையில் நெல்லை மாவட்டத்தில் அன்புச்சுவர் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்ட ஆட்சித்தலைவராக சந்தீப் நந்தூரி பொறுப்பேற்ற பின்னர் பல்வேறு வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அந்த வகையில் தமிழகத்தில் முதல்முறையாக அன்புச்சுவர் என்ற புதிய திட்டத்தை கடந்த மாதம் தொடங்கி வைத்தார்.
இதன்மூலம் பொதுமக்கள் தங்களிடம் தேவைக்கு அதிகமாக உள்ள ஆடைகள், புத்தகங்கள், காலணிகள், உள்ளிட்டவற்றை தேவையுள்ளவர்களுக்கு கொடுத்துதவலாம் என தெரிவிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து இந்த அன்புச்சுவரில் ஏராளமான துணிகள் குவிந்தன. இந்த துணிகளை அடுக்கி ஒழுங்கு படுத்தும் பணி நடைபெற்றது.
இதில் திருநெல்வேலி மாவட்ட அனைத்து அரசு பணி மாற்றுத்திறனாளி நலச்சங்கத்தினர் பலர் கலந்துகொண்டனர். இந்தப் பணியின் போது மாவட்ட ஆட்சியர் நேரில் வந்து வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்தார்.