புதிய தாழ்வு நிலை.. கடலோர மாவட்டங்களில் கன மழை பெய்யும்.. ஞாயிறு, திங்கள் வெளுக்கும் - ரமணன்
சென்னை: புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உதயமாகியுள்ளதால், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மைய இயக்குநர் ரமணன் தெரிவித்துள்ளார். வரும் 29 மற்றும் 30ம் தேதிகளில், கடலோர பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் ரமணன் கூறியுள்ளார்.
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. கடந்த 9ம் தேதி முதல் கனமழை கொட்டி வருகிறது. இதனால் தமிழகம் முழுவதும் வெள்ளக்காடக மாறியுள்ளது. சராசரிக்கும் கூடுதலாகவே மழை பெய்துள்ளதால் இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.
காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களிலும் கனமழை பெய்து ஏரி, குளங்கள் நிரம்பி வழிகின்றன. புறநகர் பகுதிகள் வெள்ளக்காடாக மாறியுள்ளன. கடந்த இரு தினங்களாக மழை சற்றே குறைந்து வெயில் தலைகாட்டி வருகிறது.
இந்த நிலையில் சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய வானிலை ஆய்வுமைய இயக்குநர் ரமணன், தென்கிழக்கு வங்கக் கடல் அருகே மேலடுக்கு சுழற்றியானது காற்றழுத்த தாழ்வு நிலை உதயமாகியுள்ளதால் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் மழை பெய்யும் என்று கூறியுள்ளார்.
இந்த காற்றழுத்த தாழ்வு நிலை மேற்கு நோக்கி நகருகிறது. அது இலங்கையை நோக்கி நகரும்போது வரும் நாட்களில் தமிழகத்தில் மழை அதிகரிக்கும்
அடுத்த 24 மணி நேரத்தில் சென்னையில் வானம் மேகமூட்டமாக இருக்கும் கடலோர மாவட்டங்களில் வரும் நாட்களில் கன மழை பெய்யலாம். வரும் ஞாயிறு, திங்கள் கிழமைகளில் சென்னையில் கன மழைக்கு வாய்ப்புண்டு என்றும் ரமணன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.