விடுதலைப் புலிகள் இயக்கம் ஒரு தீவிரவாத இயக்கமே- ஈழத் தமிழருக்கு ஆதரவானது காங்: நடிகை குஷ்பு
சென்னை: தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் ஒரு தீவிரவாத இயக்கமே.. காங்கிரஸ் கட்சி தீவிரவாதத்துக்குத்தான் எதிரியே தவிர ஈழத் தமிழருக்கு அல்ல என்று நடிகை குஷ்பு கூறியுள்ளார்.
திமுகவில் இருந்து விலகிய நடிகை குஷ்பு திடீரென டெல்லியில் சோனியாவை சந்தித்து காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். அதன் பின்னர் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.
பின்னர் நேற்று சென்னை திரும்பிய குஷ்பு இன்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைமையகமான சத்தியமூர்த்தி பவனுக்கு சென்றார். அவரை காங்கிரசார் குஷ்புவை வரவேற்றனர்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் குஷ்பு கூறியதாவது:
இந்தியாவை காப்பாற்ற காங்கிரஸ் கட்சியால் மட்டுமே முடியும் என்பதால் இந்த கட்சியில் இணைந்தேன். என்னைப் பொறுத்தவரையில் திசைமாறிப் போய் தாய் வீடு திரும்பியதைப் போல காங்கிரசில் இணைந்ததை உணர்கிறேன்.
சாதி, மதபேதமின்றி நாட்டுக்கு சேவை செய்ய காங்கிரஸ் கட்சியால் மட்டுமே முடியும். நாடு முழுவதும் தெருத்தெருவாக சென்று காங்கிரஸ் கட்சிக்காக பிரசாரம் செய்வேன்.
பொதுவாக ஆசைக்காக அரசியலுக்கு வரக் கூடாது. கட்சிக்கு நாட்டுக்கு உழைப்பதற்காக அரசியலுக்கு வர வேண்டும். திமுகவில் இருந்து ஏன் வெளியேறினேன் என்று அப்போதும் சொல்லவில்லை. இன்றும் சொல்லமாட்டேன். நாளை கேட்டாலும் சொல்லமாட்டேன்.
நான் பதவிக்காக காங்கிரஸ் கட்சியில் சேரவில்லை. எனக்கு என்ன பதவி கொடுப்பது என்பதை காங்கிரஸ் கட்சியின் மேலிடம் முடிவு செய்யும்.
கோடிக்கணக்கான காங்கிரஸ் கட்சியின் தொண்டர்களில் ஒருத்தியாக இருப்பேன். எனக்கு காங்கிரஸ் மீது முழு நம்பிக்கை இருப்பதாலேயே இணைந்தேன்.
காங்கிரஸ் கட்சி ஒருபோதும் ஈழத் தமிழருக்கு எதிரானதாக இருந்தது இல்லை. காங்கிரஸைப் பொறுத்தவரை அது தீவிரவாதிகளுக்கு எதிரான ஒரு கட்சி.
இவ்வாறு குஷ்பு கூறினார்.
அப்போது, விடுதலைப் புலிகள் இயக்கம் ஒரு பயங்கரவாத இயக்கமா என்று செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்ப, நிச்சயமாக, அப்பாவிகளின் உயிரை எடுப்பவர்கள் பயங்கரவாதிகளே.. தீவிரவாதத்தை கடைசி மூச்சு உள்ளவரை எதிர்ப்போம் என்றார் குஷ்பு.