கருணாநிதி உடல்நலம் குறித்து நேரில் விசாரித்தார் மு.க.அழகிரி !
உடல்நலக்குறைவால் ஆழ்வார்பேட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள திமுக தலைவர் கருணாநிதியை அவரது மகன் அழகிரி இன்று சந்தித்து நலம் விசாரித்துள்ளார்.
சென்னை: உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சென்னை ஆழ்வார்பேட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள திமுக தலைவர் கருணாநிதியை அவரது மகன் அழகிரி இன்று நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
ஊட்டச்சத்து, நீர்ச் சத்து குறைபாடு காரணமாக, கடந்த டிசம்பர் 1-ம் தேதியன்று காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் கருணாநிதி. ஒருவார சிகிச்சைக்கு பின்னர் கருணாநிதியின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, கடந்த டிசம்பர் 7-ம் தேதி இரவு வீடு திரும்பினார். வீட்டில் முழுமையாக ஓய்வு எடுக்கும்படி கருணாநிதிக்கு மருத்துவர்கள் அறிவுறுத்தினர்.
இந்நிலையில், நேற்று இரவு 11 மணியளவில் அவருக்கு திடீரென தொண்டை, நுரையீரல் நோய்த் தொற்று காரணமாக அவர் உடனடியாக காவேரி மருத்துவமனையில் மீண்டும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இதன் பின்னர் அவரது உடல்நிலை சீராக உள்ளாத மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
இந்தநிலையில் இன்று மாலை முன்னாள் அமைச்சரும், கருணாநிதியின் மகனுமான மு.க.அழகிரி காவேரி மருத்துவமனைக்கு வந்து கருணாநிதியை நேரில் சந்தித்து உடல்நலம் விசாரித்தார். இதனிடையே கவிஞர் வைரமுத்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், காங்கிரஸ் எம்.எல்.ஏ. வசந்தகுமார் உள்ளிட்டோர் காவேரி மருத்துவமனைக்கு நேரில் வந்து கருணாநிதியின் உடல்நலம் விசாரித்தனர்.