நேற்று வரை பரம விரோதிகள்.. இன்று தமிழக நலன் காப்போர் என புதிய அவதாரம்.. ஸ்டாலின் பாய்ச்சல்
நேற்று வரை பரம விரோதிகளாக இருந்தவர்கள் இன்று தமிழக நலன் காப்பவர்கள் என புதிய அவதாரம் எடுத்துள்ளனர் என அதிமுகவின் இரு அணியினரையும் எதிர்க்கட்சித் தலைவர் மு. க. ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னை: ஊழல் பாவக்கறை படிந்த அதிமுகவின் இரு அணிகளில் உள்ளவர்களையும் புனிதர்களாக்காமல் சட்ட நடவடிக்கைகள் தொடர வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
இதுகுறித்து ஸ்டாலின் கூறியதாவது: ஜெயலலிதா மரணத்திற்கு பிறகு வருமான வரி சோதனையும் அதிமுகவில் குழப்பமும் கைகோர்த்து பயணம் செய்கிறது.
நேற்று வரை பரம விரோதிகளாக இருந்தர்வர்கள் இன்று தமிழக நலம் காப்போம் என்று புதிய அவதாரம் எடுத்து உள்ளனர்.
கஜானா காலி
மணல் மாஃபிய சேகர்ரெட்டியும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் தமிழக கஜானாவை சுரண்டியவர்கள். கரூர் அன்புநான் வீட்டில் நடந்த ரெய்டில் இதுவரை கண்ணாமூச்சி ஆட்டமே நடைபெறுகிறது.
கண்ணாமூச்சி ஆட்டம்
நத்தம் விஸ்வநாதன் மற்றும் சைதை துரைசாமி வீடுகளில் நடந்த ரெய்டு என்ன ஆனது என்பதே தெரியவில்லை. அதே போன்று தலைமைச் செயலகம், தலைமைச் செயலாளர் ராம மோகன் ராவ், அவரது மகன் வீட்டில் சோதனைகள் நடத்தப்பட்டன. இதெல்லாம் என்ன ஆனது என்றே தெரியவில்லை.
மீண்டும் பதவி
தொடர் வருமான வரித்துறை சோதனைகளின் முடிவு தெரிவதற்கு முன்பே தலைமை செயலாளர் ராம மோகன் ராவிற்கு மீண்டும் பதவி வழங்கியுள்ளது தமிழக அரசு. தங்கக்கட்டி, புது நோட்டு பறிமுதல், சொத்துக்குவிப்பு நெடுஞ்சாலைத் துறை, மருத்துவமனைகளில் ஊழல் என தொடர்ந்து தமிழகம் ஊழலில் திளைத்து வருகிறது.
தொடரட்டும்
நடவடிக்கை தொடரட்டும் வருமானவரித்துறை, அமலாக்கத்துறை ஆகிய அமைப்புகள் சுதந்திரமாக செயல்பட மத்திய அரசு தொடர்ந்து உதவ வேண்டும். சட்ட ரீதியான நடவடிக்கைகள் அனைத்தும் முறையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.