கல்லூரி மாணவர்கள் மீது தடியடி நடத்துவதா?: மு.க.ஸ்டாலின் கண்டனம்!
சென்னை: சென்னையில் மறியலில் ஈடுபட்ட மாநிலக்கல்லூரி மாணவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தி இருப்பதற்கு திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து தனது முகநூலில், பதிவிட்டுள்ள ஸ்டாலின், அண்ணா சமாதி அருகில் சாலை மறியலில் ஈடுபட்ட மாநிலக்கல்லூரி மாணவர்கள் மீது சென்னை மாநகரக் காவல்துறை தடியடி நடத்தியது வேதனையளிப்பது மட்டுமின்றி, கடும் கண்டனத்திற்குரியது.
சென்னையிலுள்ள அனைத்து கல்லூரிகளிலும் மாணவர் பேரவை தேர்தல் நடைபெற்று முடிந்துவிட்ட பிறகும் மாநிலக் கல்லூரி மாணவர் பேரவை தேர்தல் மட்டும் நடத்தப்படவில்லை. இது குறித்து மாணவர்கள் தரப்பில் அளித்த மனுக்களும், விடுத்த கோரிக்கைகளும் மதிக்கப்படவில்லை. தேர்தலை நடத்தாமல் இருப்பதற்கான நியாயமான காரணத்தையும் கல்லூரி நிர்வாகம், மாணவர்களுக்கு விளக்கிக் கூறவில்லை. ஆகவே, மாணவர் பேரவை தேர்தலை நடத்தாமல் மெத்தனமாக இருக்கும் நிர்வாகத்தின் கவனத்தை ஈர்க்க அமைதியாக மறியல் செய்வதைத் தவிர வேறு வழியில்லை என்ற நிலைக்கு மாணவர்கள் தள்ளப்பட்டார்கள்.
நிர்வாகத்திலும், கொள்கை முடிவுகள் எடுப்பதிலும் மாணவர்களின் பங்களிப்பை உறுதி செய்ய இதுபோன்ற பேரவைத் தேர்தல் அவசியம். இந்த சூழலின் பின்னனியில்தான் இளம் பருவத்தில் உள்ள மாணவர்களை தமிழகத்தின் எதிர்கால நலன் கருதி அரசியலில் ஈடுபட ஊக்குவிப்பது அவசியமாகிறது.
கொள்கை முடிவுகள் எடுப்பதிலிருந்தும், ஜனநாயகத்திலிருந்தும் மாணவர்களை இதுபோல் ஒதுக்கி வைப்பது தமிழகத்தின் எதிர்காலத்திற்கு வலு சேர்க்காது. ஆகவே கல்லூரி முதல்வரும், நிர்வாகமும் மாணவர்களுடன் மனம் திறந்து பேச்சுவார்த்தை நடத்தி, இப்பிரச்னைக்கு சுமூகமான தீர்வு காண வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்" என்று கூறி உள்ளார்.