ஹைட்ரோ கார்பன் திட்டத்தில் இரட்டை வேடம் போடும் மத்திய பாஜக அரசு- மு.க. ஸ்டாலின் காட்டம்
ஹைட்ரோ கார்பன் விவகாரத்தில் மத்திய அரசு இரட்டை வேடம் போடுகிறது என்று மு.க. ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னை: விவசாயிகளின் பிரச்சனை குறித்து மத்திய-மாநில அரசுகள் கண்டுகொள்ளவில்லை என்று திமுக செயல் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான மு.க. ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் மு.க. ஸ்டாலின் பேசும் போது, மக்கள் படும் வேதனையை குறிப்பாக விவசாயிகள் பிரச்சனை குறித்து கிஞ்சித்தும் மாநில அரசு கவலைப்படவில்லை. இது கண்டனத்திற்குரியது என்று தெரிவித்தார். மேலும், மத்திய அரசும் விவசாயிகளின் போராட்டங்களை கண்டுகொள்ளவில்லை என்று குற்றம்சாட்டினார்.
அதே போன்று ஹைட்ரோ கார்பன் திட்டம் தொடர்பாக மத்திய அரசு இரட்டை வேடம் போடுகிறது என்று குற்றம்சாட்டிய ஸ்டாலின், ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக சட்டசபையில் தீர்மானம் கொண்டு வர வேண்டும் என்று கோரினார்.
ஆர்.கே. நகர் தொகுதி இடைத்தேர்தலைப் பொறுத்தவரை நேர்மையாக நடக்கும் என எதிர்பார்ப்பதாக மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.