நான் மேயரா இருந்தப்ப... கராத்தே தியாகராஜன் துணை மேயரா இருந்தார்... ஸ்டாலின் பிளாஷ்பேக்
சென்னை: சென்னை மாநகராட்சியில் நான் இரண்டுமுறை மேயராக பதவி வகித்துள்ளேன். அப்போது துணைமேயராக இருந்த கராத்தே தியாகராஜன் என்னை எத்தனையோ கேள்விகள் கேட்டிருக்கிறார் என்று மைலாப்பூரில் தேர்தல் பிரச்சாரம் செய்த ஸ்டாலின் பழைய சம்பவங்களை நினைவுபடுத்தி பேசினார்.
எங்கள் ஆட்சி காலத்தில் நான் மேயராக இருந்த போது எத்தனையோ மேம்பாலங்களை கட்டினோம். ஆனால் இப்போது ஆட்சியில் இருப்பவர்கள் ஒரு மேம்பாலத்தையாவது கட்டியதுண்டா என்று கேட்டார் ஸ்டாலின்.
மாநகராட்சி மாமன்றங்கள் அம்மா புகழ்பாடும் மன்றங்களாக மாறி விட்டது என்று கூறிய ஸ்டாலின் சட்டசபையும் பஜனை மடங்களாக மாறிவிட்டதாக குற்றம் சாட்டினார்.
சென்னை மயிலாப்பூரில் காங்கிரஸ் வேட்பாளர் கராத்தே தியாகராஜனை ஆதரித்து திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை 5 மணிக்கு பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர் தேர்தல் நேரத்தில் மட்டுமே மக்களை பற்றி எண்ணி பார்ப்பவர் ஜெயலலிதா என ஸ்டாலின் குற்றம் சாட்டினார்.
சென்னை வெள்ளம்
கடந்த 5 ஆண்டு ஆட்சி காலத்தில் எந்த தொகுதிக்காவது ஜெயலலிதா சென்றது உண்டா என கேள்வி எழுப்பினார். நாட்டை பற்றியோ, மக்களை பற்றியோ கவலைப்படாதவர் ஜெயலலிதா என்றும், சென்னையில் செயற்கையான பேரிடர் ஏற்படுத்தப்பட்டதில் 341 உயிரிழந்தனர் என்றார்.
அதிமுக வேட்பாளர் நடராஜ்
சென்னை கே.கே.நகரில் கடந்த 2005ம் ஆண்டு வெள்ள நிவாரணம் பெற சென்ற 42 பேர் நெரிசலில் சிக்கி உயரிழந்தததை சுட்டிக்காட்டிய ஸ்டாலின், 42 பேர் உயிரிழந்த போது சென்னை காவல் ஆணையராக இருந்தவர் தான் அதிமுக வேட்பாளர் என அவர் தெரிவித்தார்.
அரசியலுக்கு வந்த ஐ.பி.எஸ் அதிகாரி
திமுக நிர்வாகி மீது ஜெயலலிதா உத்தரவின் பேரில் பொய் வழக்கு போட்டவர் அதிமுக வேட்பாளர் நட்ராஜ் என ஸ்டாலின் தெரிவித்தார்.
மேலும் ஓய்வு பெற்ற பின் அதிமுகவில் சேர்ந்த நட்ராஜ் தற்போது அதிமுக வேட்பாளராக நியமிக்கப்பட்டுள்ளதாக ஸ்டாலின் குற்றம் சாட்டினார்.
வீதிக்கு வீதி டாஸ்மாக்
பால் விலை, மின்கட்டணத்தை உயர்த்தியவர் முதலமைச்சர் ஜெயலலிதா என்றும் குற்றம் சாட்டிய ஸ்டாலின், வீதிக்கு வீதி டாஸ்மாக் கடையை திறந்து வைத்து சொல்லாததையும் செய்தவர் தான் ஜெயலலிதா என்று ஸ்டாலின் குற்றம் சாட்டினார்.
மேயராக இருந்த காலம்
நான் 1996 முதல் 2001 வரை சென்னை மேயராக இருந்த போது சென்னையில் பல இடங்களில் மேம்பாலங்கள் கட்டப்பட்டன என்று கூறிய ஸ்டாலின், 2001ம் ஆண்டு மீண்டும் மேயராக பதவி வகித்த போது துணை மேயராக இருந்த கராத்தே தியாகராஜன் பல கேள்விகளை கேட்டவர் என்று கூறி பழைய நினைவுகளை அசைபோட்டார்.
பஜனை மடம்
எதிர்கட்சியினர் கேள்விகளுக்கு நாங்கள் பதில் சொல்வோம், ஆனால் இன்றைக்கு மாநகராட்சி மாமன்றங்கள் ஜெயலலிதா புகழ் பாடும் மன்றங்களாகி விட்டன என்றார். எதிர்கட்சிகள் கேள்விகள் கேட்டால் வெளியேற்றப்படுவதாகவும் குற்றம் சாட்டினார்.
முதல் வேலை அதுதான்
சட்டமன்றம் ஜெயலலிதாவின் புகழ்பாடும் பஜனை மன்றமாக கடந்த 5 ஆண்டுகளாக மாறிவிட்டதாகவும், 5 ஆண்டு ஜெயலலிதா ஆட்சியில் சென்னையில் ஒரு பாலமாவது கட்டப்பட்டுள்ளதா? என ஸ்டாலின் கேள்வி எழுப்பினார். ஜெயலலிதா பேரை சொன்னாலே பெஞ்ச் தட்டுவதுதான் வாடிக்கையாகிவிட்டது என்றும் ஸ்டாலின் தெரிவித்தார்.
கராத்தே தியாகராஜன்
2001ம் ஆண்டு சென்னை மேயராக வெற்றி பெற்ற ஸ்டாலின், எம்.எல்.ஏ.வாகவும் வெற்றி பெற்றார். 'ஒருவருக்கு ஒரு பதவிதான்' என்று இதை எதிர்த்து அன்றைய அதிமுக அரசு தொல்லை கொடுத்தது. அப்போது அதிமுகவின் தென்சென்னை மாவட்டச் செயலாளராக இருந்த இதே கராத்தே தியாகராஜன் சென்னையின் துணை மேயராகவும் இருந்தார்.
அந்த நாள் ஞாபகம்
ஸ்டாலினை ரிப்பன் மாளிகைக்குள்ளேயே நுழைய விடாமல் பார்த்துக் கொண்ட அதே கராத்தே தியாகராஜன்தான் இன்றைக்கு ஸ்டாலினுக்கு அருகில் நின்று கை கூப்பியபடி மயிலாப்பூரில் வாக்கு கேட்டு வந்தார். பழைய நினைவுகளை ஸ்டாலின் அசை போட்ட போது, அருகில் நின்றிருந்த கராத்தே தியாகரஜனின் ரியக்சனை எழுதத்தான் சரியான வார்த்தைகள் இல்லை. அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா என்பதைத் தவிர வேறென்ன சொல்ல?