ஓ.பி. என்றால் "அவுட் பேஷண்ட்" - ஓ.பி.எஸ்.-க்கு புது விளக்கம் சொல்லும் மு.க.ஸ்டாலின்!!
கோவை: தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை ஓ.பி. அதாவது அவுட் பேஷண்ட் என்று தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் கிண்டலாக விமர்சித்துள்ளார்.
கோவையில் வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் மு.க.ஸ்டாலினின் 63வது பிறந்த நாளை முன்னிட்டு 115 ஜோடிகளுக்கு இலவச திருமணம் நேற்று நடத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் ஸ்டாலின் கலந்து கொண்டு 115 ஜோடிகளுக்கு தனித்தனியாக தாலி எடுத்துக் கொடுத்து திருமணம் செய்து வைத்தார். அவர்களுக்கு 63 வகையான சீர்வரிசைகளையும் அவர் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் ஸ்டாலின் பேசியதாவது:
கேள்விக்கு என்ன பதில்?
தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு திறந்த மடல் ஒன்றை எழுதியிருந்தேன். அதில் பல கேள்விகளை கேட்டிருந்தேன்..அந்த கடிதத்துக்கு இன்னும் பதில் வரவில்லை. அவர் பதிலளிப்பாரா என்பது கேள்விக்குறிதான்..அந்த கேள்விகளெல்லாம் தமிழக முதல்வரை நோக்கி கேட்கப்பட்டவை என்பதால், அதற்கு பதிலளித்து விட்டால் அவர் முதல்வர் என்றாகிவிடுவார். எனவே, அவர் பதிலளிக்க மாட்டார்.
இன்னமும் அமைச்சர்...
தமிழக முதல்வராக பன்னீர்செல்வம் பதவியேற்றது முதல் இன்று வரை முதல்வர் அறைக்கு சென்று, முதல்வர் நாற்காலியில் அமரவில்லை; அவரது அலுவலகம், இல்லத்தில் இன்னும் தமிழக நிதி மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் என்ற பெயர் பலகை தான் வைக்கப்பட்டுள்ளது.
ஓ.பி.எஸ் ஒரு 'அவுட் பேஷண்ட்'
தன்னை ஒரு முதல்வராக கூட அறிவித்துக்கொள்ளாதவராக பன்னீர்செல்வம் இருக்கிறார். ஓ.பன்னீர்செல்வத்தை ஓ.பி. என கூறலாம். அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற வரும் வெளிநோயாளிகளை அவுட் பேஷண்ட் என்றும் சுருக்கமாக ஓ.பி. என்றும் குறிப்பிடுவார்கள். அவ்வாறு சிகிச்சை பெற வரும் வெளி நோயாளிகள் சிகிச்சை முடித்த பின் சென்றுவிட வேண்டும். உள்ளே அனுமதிக்கப்படமாட்டார்கள். அதே போல்தான் முதல்வர் அறையினுள் செல்லாமலேயே ஓ.பன்னீர்செல்வம் முதல்வராக இருக்கிறார். அதனால் அவரை ஓ.பி. என்று அழைக்கலாம்.
ஒரு ஆபீஸ் கூட இல்லையே
ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது கோட்டை மட்டுமல்லாமல், போயஸ் கார்டன், கொடநாடு என மூன்று இடங்களில் முதல்வர் அலுவலகம் இயங்கியது. ஆனால், தற்போதைய முதல்வர் பன்னீர்செல்வத்துக்கு ஒரு இடத்தில் கூட அலுவலகம் இல்லாத நிலை உள்ளது.
இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.