தன் சட்டையை தானே கிழித்துக்கொண்ட தகுதி இல்லாத தலைவர் ஸ்டாலின்.. தங்கமணி விளாசல்!
தலைவர் என்றால் ஒரு தகுதி வேண்டும், அது மு.க.ஸ்டாலினிடம் இல்லை என அமைச்சர் தங்கமணி குற்றம்சாட்டியுள்ளார்.
ராசிபுரம்: சட்டசபையில் தானே சட்டையைக் கிழித்துக் கொண்டு நாடகம் போடும் ஸ்டாலினுக்கு தலைவராக இருக்க எவ்வித தகுதியும் இல்லை என்று அமைச்சர் தங்கமணி சாடியுள்ளார்.
ராசிபுரம் புதிய பஸ் நிலையம் அருகில் மறைந்த முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழா பொதுக் கூட்டம் நடந்தது.
இதில் தமிழக மின்சாரம் மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சருமான பி.தங்கமணி கூறியதாவது: திருமணத்தின்போது சீப்பை மறைத்து வைத்து விட்டால் திருமணம் நின்று போய்விடும் என்ற சிலர் மனக்கணக்கு போடுகின்றனர். எப்படிப்பட்ட சோதனையான காலத்திலும் இந்த இயக்கத்தை கட்டிக்காத்து வருபவர்கள் தொண்டர்கள்.
மக்களுக்காக பணியாற்றிய ஜெயலலிதா மறைந்த சில மாதங்களுக்குள் எத்தனை துரோகங்கள் நிகழ்ந்திருக்கிறது என்பதை இங்குள்ளவர்கள் நன்கு அறிந்திருப்பீர்கள். துரோகம் எப்போதும் வெற்றி பெற்றதில்லை. எங்களுக்குள் அதிகார போட்டி இல்லை.
சாதாரண எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக வந்துள்ளார் என்றால் அதுதான் இந்த இயக்கத்தின் பெருமை. ஜெயலலிதாவுக்கு எதிரிக் கட்சி தி.மு.க., அவருக்கு எதிரி கருணாநிதி. அதேபோல்தான் நமக்கும் எதிரி கட்சி தி.மு.க.தான். ஆனால் நம்மிடம் இருந்து பிரிந்து சென்ற துரோகிகள் சிலர் தி.மு.க. ஆட்சிக்கு வருவதற்கு துணை போகின்றனர்.
ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு 2 மாதம் முதல்வராக இருந்த பன்னீர் செல்வம் ஏதாவது திட்டத்தை அறிவித்தாரா? ஆனால் எடப்பாடி பழனிசாமி முதல் அமைச்சர் ஆக பதவியேற்றதும் முதலில் 5 திட்டங்களில் கையெழுத்திட்டார்.
இதில் யார் ஜெயலலிதாவின் உண்மை விசுவாசிகள் என்பதை நினைத்து பார்க்க வேண்டும். இரட்டை இலை சின்னத்தில் நின்று வெற்றி பெற்ற பாராளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.சுந்தரம் அந்த சின்னத்தை முடக்க மனு கொடுக்கிறார் என்றால் அவர் உண்மையான அ.தி.மு.க. தொண்டாரா? இந்த இயக்கத்தை காப்பாற்ற நாங்கள் கஷ்டப்படுகிறோம். அவர்கள் இரட்டை இலையை முடக்க முயற்சிக்கின்றனர். நாமக்கல் மாவட்டம் எப்போதும் ஜெயலலிதாவின் கோட்டை என்பதை வரும் உள்ளாட்சி தோதலில் நிரூபிக்க வேண்டும்.
சட்டமன்றத்தில் ஸ்டாலினின் சட்டையை யாரும் கிழிக்கவில்லை. அவரே கிழித்துக் கொண்டு வெளியே வந்து நிருபர்களிடம் காட்டுகிறார். தலைவர் என்றால் ஒரு தகுதி வேண்டும். அது ஸ்டாலினிடம் இல்லை. அவரிடம் ஆட்சியை ஒப்படைத்தால் ஜெயலலிதா கொண்டு வந்த எந்த திட்டமும் மக்களுக்கு கிடைக்காது. சட்டமன்றத்தில் தி.மு.க.வினர் நடந்து கொண்ட விதத்தை மக்கள் மத்தியில் இருந்து மறைப்பதற்காக ஸ்டாலின் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்துகிறார் என்றார் அவர்.