12 சட்டசபை குழுக்களை அமைக்கவில்லை என்றால் சபாநாயகர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் - ஸ்டாலின்
காவிரி பிரச்சனை தொடர்பாக ஒ. பன்னீர் செல்வத்தை சந்திக்கமு.க.ஸ்டாலின் தலைமை செயலகம் சென்றார். ஆனால் ஓபிஎஸ் இல்லாததால் அவரது அலுவலகத்தில் ஸ்டாலின் மனு கொடுத்தார்
சென்னை: மதிப்பீட்டுக் குழு உட்பட 12 சட்டசபை குழுக்களை அமைக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் கடிதம் கொடுத்துள்ளார். சட்டசபை குழுக்களை அமைக்காவிட்டால் சபாநாயகர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வருவோம் என்றும் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக சென்னை தலைமை செயலகத்திற்கு இன்று காலையில் மு.க. ஸ்டாலின் சென்று, சட்டப்பேரவை செயலாளரிடம் கடிதம் கொடுத்தப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசியதாவது;
மதிப்பீட்டுக் குழு, பேரவைக்குழு, சட்டவிதிகள் குழு, மனுக்குழு, நூலகக்குழு உள்ளிட்ட 12 குழுக்கள் ஒவ்வொரு ஆண்டும் அமைக்கப்பட வேண்டும். அதிமுக ஆட்சிக்கு வந்து 5 மாதங்கள் கடந்த பின்னரும் இன்னும் இந்தக் குழுக்கள் அமைக்கப்பட வில்லை. நானும், துணைத் தலைவர் துரைமுருகனும் சட்டப்பேரவையில் சபாநாயகரிடம் இதுகுறித்து பேசினோம். அதற்கு அவர் இந்தக் குழுக்களை அமைப்பதாக கூறியிருக்கிறார். பேரவைக் குறிப்பிலும் அவர் அளித்த உறுதிமொழி பதிவாகியுள்ளது.
இந்நிலையில், இதுகுறித்த நினைவூட்டல் கடிதம் ஒன்றை சபாநாயகரிடம் கொடுக்க வந்தோம். ஆனால், அலுவலகத்தில் அவர் இல்லாத காரணத்தால் பேரவைச் செயலாளரிடம் கொடுத்துள்ளோம். இதுகுறித்து சபாநாயகர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்படி இல்லை என்றால் அவர் மீது நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தைக் கொண்டு வருவோம். மேலும், இதுகுறித்து தமிழக பொறுப்பு கவர்னரையும் சந்தித்து பேச உள்ளோம்.
கடந்த 25ம் தேதி நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தின் போது எடுக்கப்பட்ட தீர்மானத்தின் நகலை தமிழக முதல்வரின் பொறுப்புக்களை கூடுதலாக கவனித்து வரும் நிதியமைச்சர் ஒ.பன்னீர் செல்வத்திடம் கொடுக்க வந்தோம். அவரும் அலுவலகத்தில் இல்லாத காரணத்தால் தலைமைச் செயலாளரிடம் கொடுத்துவிட்டு வந்திருக்கிறோம் என்று ஸ்டாலின் தெரிவித்தார்.