அரசு பணத்தில் குற்றவாளி ஜெயலலிதாவுக்கு பிறந்த நாள் கொண்டாட்டம்.. தலைமைச் செயலரிடம் ஸ்டாலின் புகார்
சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட ஜெயலலிதாவின் பிறந்த நாளை அரசு சார்பில் கொண்டாடியது தவறு என்று ஸ்டாலின் தெரிவித்தார்.
சென்னை: தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதனை திமுக செயல் தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான ஸ்டாலின் தெரிவித்தார். மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் இன்று காலை சந்தித்தார். ஸ்டாலின் உடன் எம்எல்ஏக்கள் சேகர் பாபு மற்றும் மா.சுப்பிரமணியன் சென்றிருந்தனர்.
பின்னர் நிருபர்களிடம் ஸ்டாலின் கூறியது: சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட ஜெயலலிதாவின் பிறந்த நாளை அரசு சார்பில் கொண்டாடியது தவறு. அரசு பணத்தில் ஜெயலலிதா பிறந்த நாளை எப்படி கொண்டாடலாம்?
அரசியல் சட்டத்துக்கு எதிராக தலைமை செயலாளர் செயல்பட்டுள்ளதை ஏற்க முடியாது. இந்த பிரச்சினையில் ஆளுநர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜெயலலிதா பெயரிலான திட்டங்களை செயல்படுத்தகூடாது. புதிதாக அவர் பெயரில் திட்டங்கலை தொடங்கவும் கூடாது.
அரசு அலுவலகங்களில் உள்ள ஜெயலலிதாவின் புகைப்படங்களை அகற்றவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தலைமைச் செயலரிடம் வற்புறுத்தியுள்ளேன். புகைப்படங்களை அகற்றாவிட்டால் நீதிமன்றத்தை நாட திமுக தயங்காது. நல்ல அதிகாரி என பெயர் எடுத்துள்ள கிரிஜாவிடம் மேற்கண்ட கோரிக்கைகளை மனுவாக கொடுத்துள்ளோம். அவர் நடவடிக்கை எடுப்பார் என நம்புகிறேன்.