ஊடக செய்தி எதிரொலி.. மதுரை மருத்துவமனையில் தீப்பொறி ஆறுமுகத்தை சந்தித்த ஸ்டாலின்.. ரூ.1 லட்சம் உதவி
மதுரை: கல்லீரல் பாதிக்கப்பட்டு மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் 15 தினங்களுக்கு முன்பு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட திமுக ஸ்டார் பேச்சாளரான தீப்பொறி ஆறுமுகத்தை கட்சி பொருளாளர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் சந்தித்து, சிகிச்சைக்காக ரூ.1 லட்சம் நிதி உதவி செய்தார்.
தீப்பொறி ஆறுமுகம் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு, செலவீனங்களுக்கு கஷ்டப்பட்ட இந்த செய்தி ஊடகங்களில் வெளியானதும், அதுகுறித்து அறிந்து கொண்ட திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் இன்று தீப்பொறி ஆறுமுகத்தை சந்தித்து ஆறுதல் கூறியதோடு ரூ.1 லட்சத்துக்கான காசோலையை வழங்கி, மருத்துவ செலவீனங்களுக்கு வைத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார்.
சட்டமன்றத்தில் ஜனநாயகம் படும்பாடு என்ற தலைப்பில் மதுரையில் இன்று மாலை நடக்கும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக, சென்னையிலிருந்து மதுரைக்கு ஸ்டாலின் விமானத்தில் வந்திருந்தார்.
வந்தவுடன் மதியம் 1.30 மணியளவில், முதல் வேலையாக தீப்பொறி ஆறுமுகத்தை ஸ்டாலின் சந்தித்தார். ஊடகங்களில் செய்தி வந்த பிறகுதான் கட்சியின் முன்னணி தலைவர்கள் பலர் என்னை சந்தித்து ஆறுதல் கூறினர் என்று தீப்பொறி ஆறுமுகம் கருத்து தெரிவித்துள்ளார்.
பொன்.முத்தராமலிங்கம், ஆரப்பாளையம் ஜெயராமன், ஐ.பெரியசாமி, பி.டி.ஆர்.பி.தியாகராஜன், மா.செ.தளபதி, வேலுசாமி போன்ற முன்னணி பிரபலங்கள் என்னை சந்தித்து ஆறுதல் கூறி, உதவிகள் செய்கின்றனர் என்று தீப்பொறி ஆறுமுகம் தெரிவித்தார்.
உடல் நிலை தேறி வந்ததும், முழு மூச்சாக மேடைகளில் பேசுவேன் என்றும் உற்சாகமாக கூறியுள்ளார் தீப்பொறி ஆறுமுகம்.