ஸ்டாலினுடன் கை குலுக்கி புன்னகையோடு நிவாரண நிதி வாங்கிய நிதித்துறை செயலர்... பாவம்
சென்னை: தி.மு.க பொருளாளர் மு.க.ஸ்டாலினிடம் புன்னகையோடு பேசி சிரித்த நிதித்துறை செயலாளரை நினைத்தால் பாவமாக உள்ளது.
ஆட்சியில் இருப்பவர்கள் சொல்வதைக் கேட்டு செய்வதுதான் ஐ.ஏ.எஸ் படித்த அதிகாரிகளின் வேலையாக இருக்கிறது. திமுகவோ அதிமுகவோ யார் ஆட்சியில் இருந்தாலும் இதுதான் நிலை. இதில் அதிகாரிகள் பாடுதான் படு திண்டாட்டம்.
திமுக வழங்கும் வெள்ள நிவாரண நிதியை வாங்குவதில் ஏற்பட்ட பஞ்சாயத்தில் ஒருவழியாக நேற்று 1 கோடி ரூபாய்க்கான காசோலையை நேற்று தலைமை செயலகத்தில் நிதித்துறை செயலாளர் கே.சண்முகத்திடம் நேரில் சந்தித்து வழங்கிவிட்டார் மு.க.ஸ்டாலின்.
2005ம் ஆண்டு சுனாமி நிதி வழங்க வந்த மு.க.ஸ்டாலினுக்கு நேரம் ஒதுக்கி அதனைப் பெற்றுக்கொண்ட முதல்வர் ஜெயலலிதா, தற்போது ஸ்டாலினை நேரில் சந்திக்க நேரம் ஒதுக்கவில்லை. இதற்குக் காரணம் நமக்கு நாமே பயணத்தில் ஸ்டாலின் செய்த விமர்சனங்கள்தான் என்கிறது ஆளும்கட்சி தரப்பு. ஆனால் இம்முறையோ திமுகவின் ஒரு கோடி ரூபாய் வெள்ள நிவாரண நிதியை பெரும் பஞ்சாயத்திற்குப் பிறகே நிதித்துறை செயலர் பெற்றுக்கொண்டிருக்கிறார்.
செய்தியாளர்களுக்கு மறுப்பு
மு.க.ஸ்டாலின் நேற்று நிதித்துறை செயலாளரை சந்தித்து வெள்ள நிவாரண நிதி அளிக்கிறார் என்று தகவல் வெளியானதும், ஏராளமான பத்திரிகையாளர்கள், டிவி கேமராமேன்கள் தலைமை செயலகத்தில் குவிந்தனர். ஸ்டாலின் தலைமை செயலகத்திற்கு காலை 10.40 மணிக்கு வந்து 6வது நுழைவாயில் வழியாக நிதித்துறை செயலாளரை சந்திக்க 2வது மாடிக்கு லிப்ட் மூலம் சென்றார். அப்போது அனைத்து நிருபர்கள் மற்றும் டிவி கேமராமேன்கள், புகைப்பட கலைஞர்களை தரைதளத்தை விட்டு எங்கும் செல்ல முடியாதபடி போலீசார் தடுத்து நிறுத்தி விட்டனராம்.
புன்னகையும், இறுக்கமும்
ஸ்டாலின் நேரில் வந்த உடன் புன்னகை முகத்துடன் வரவேற்று அவருடன் கைகுலுக்கினார் நிதித்துறை செயலர் சண்முகம்.
காசோலையை வழங்கும் போது எடுக்கப்பட்ட போட்டோக்களில் சற்றே இறுக்கமாக காணப்பட்டார். ஊடகங்களில் சிரித்தபடி இருந்த போட்டோக்கள் வெளியானால் பதவிக்கு ஆபத்து வந்து விடுமே என்ற அச்சம்தான் காரணமாம். ஆனாலும் அந்த புன்னகை வரவேற்பு போட்டோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகிவிட்டது ஸ்டாலினுடன் கூடவே முன்னாள் அமைச்சர்கள் துரைமுருகன், ஐ.பெரியசாமி சென்றிருந்தனர்.
நேரம் ஒதுக்காத அரசு
செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், நிதியை பெற்றுக்கொள்ள நேரம் ஒதுக்காமல் அதிகாரிகள் இழுத்தடித்தாக குற்றம் சாட்டினார்.
நானே தலைமை செயலாளருடைய செல்பேசி எண்ணைக் கண்டுபிடித்து அவரைத் தொடர்பு கொண்டேன். "உங்களைப் பார்ப்பதற்கு எங்களுக்கு நேரம் வேண்டும். 1 கோடி ரூபாய் காசோலையை தலைவர் கருணாநிதி உங்களிடத்திலே நேரடியாக சென்று வழங்கச் சொல்லியிருக்கிறார்'' என்று நான் கூறியபோது "சொல்லுகிறேன், சொல்லுகிறேன்" என்றுதான் சொல்லிக் கொண்டிருந்தார்.
அரசியல் ஆக்கவேண்டாம்
நீங்கள் உடனடியாக நேரம் வழங்கவில்லையென்று சொன்னால், இதை நான் அரசியல் ஆக்க விரும்பவில்லை. இருந்தாலும் தி.மு.க. அறிவித்த அந்த நிதியை இன்னும் வழங்கவில்லை என்று விமர்சனங்கள் வந்து விடக்கூடாது. அரசியல் நோக்கோடு அது வேறுவிதமாக வெளியில் போய்விடக் கூடாது என்பதற்காக, நாங்கள் வெளியில் பத்திரிகையாளர்களை அழைத்து இந்த செய்தியை சொல்ல வேண்டியதிருக்கும் என்று கூறவே இப்போது நிதிக்கான காசோலையை பெற்றுக்கொண்டிருக்கிறார்கள்
Exclusive: Watch DMK treasurer MK Stalin hand over flood relief fund of Rs 1 crore to the finance secretaryA genuine leader is not a searcher for consensus but a molder of consensus. Agree?1. Yes2. NoLike, share and support #DMKFor2016
Posted by DMK for 2016 on Tuesday, November 24, 2015
நிதித்துறை செயலரிடம் நிதி
நிதித்துறைச் செயலாளரிடத்திலே கொண்டு வந்து தாருங்கள் என்று எங்களுக்கு அழைப்பு வரவே அதனை மதித்து, இதை நாங்கள் அரசியல் செய்ய விரும்பாத காரணத்தால், இது மக்களுக்கு போய் சேர வேண்டிய நிவாரணம் என்கிற அந்த அடிப்படையிலே, இன்றைக்கு தலைமை செயலகத்திற்கு வந்து நிதித்துறை செயலாளரிடத்திலே அந்த காசோலையை வழங்கிவிட்டு வந்திருக்கிறோம் என்று கூறினார் ஸ்டாலின்.
அமைச்சர்கள் பயப்படுகிறார்கள்
அமைச்சர்களும் மேயர்களும் வெள்ளப் பகுதிகளுக்கு சென்றாலும், அங்கு மக்கள் வந்து கேட்கிற கேள்வியை பார்த்து விட்டு அவர்கள் திரும்பிப் போய் விடுகிறார்கள். திரும்பிப் போவது மட்டுமல்ல; இப்போதெல்லாம் வருவதற்கே பயப்படுகிறார்கள்.
மிகப்பெரிய அரசியல்தான்
அரசியலாக்க விரும்பவில்லை என்று சொல்லிக்கொண்டே நிதியை அளித்து விட்டு மிகப்பெரிய பஞ்சாயத்தை வைத்துவிட்டார் ஸ்டாலின். அப்பாடா என அந்தச் செயலாளர் மூச்சுவிட்டாலும், ஏன் கை குலுக்கனும், ஏன் சிரிக்கனும் என்ற கோபம் வர வேண்டியவர்களுக்கு வந்தால் அவரது நிலைமை என்ன ஆகுமோ?!