அ.தி.மு.க.வுக்கு மாற்றாக தி.மு.க.வைதான் மக்கள் தேர்ந்தெடுப்பர்: ஸ்ரீரங்கத்தில் ஸ்டாலின்
ஸ்ரீரங்கம்: எத்தனை கட்சிகள் தேர்தலில் போட்டியிட்டாலும் அண்ணா தி.மு.க.வுக்கு மாற்ற தி.மு.க.வைத்தான் மக்கள் தேர்ந்தெடுப்பார்கள் என்று ஸ்ரீரங்கத்தில் அக்கட்சிப் பொருளாளர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல் அடுத்த மாதம் 13-ந் தேதி நடைபெற உள்ளது. தற்போதைய நிலையில் அண்ணா தி.மு.க. தி.மு.க., மார்க்சிஸ்ட் மற்றும் பாரதிய ஜனதா கட்சி என 4 முனைப் போட்டி நிலவுகிறது.
இத்தொகுதியில் தி.மு.க. தலைமை தேர்தல் அலுவலகத்தை அக்கட்சிப் பொருளாளர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், எத்தனை கட்சிகள் போட்டியிட்டாலும் அண்ணா தி.மு.க.வுக்கு மாற்றாக தி.மு.க.வைத்தான் மக்கள் தேர்ந்தெடுப்பர்
அண்ணா தி.மு.க.வின் ஊழல் அக்கிரமங்களை எடுத்துக் கூறி வாக்கு கேட்போம். மக்கள் விரோத இந்த அண்ணா தி.மு.க. அரசை அகற்ற மக்கள் முடிவெடுத்துவிட்டனர்
கடந்த சட்டசபை மற்றும் லோக்சபா தேர்தல்களில் தேர்தல் ஆணையம் துணிந்து கூட்டணி அமைத்து அண்ணா தி.மு.க.வுக்கு ஆதரவாக செயல்பட்டது. ஆனால் தற்போது பொறுப்பேற்றுக் கொண்டிருக்கிற புதிய தேர்தல் ஆணையர் நிச்சயமாக அக்கிரமங்களுக்கு உடந்தையாக இருக்கமாட்டார் என்ற நம்பிக்கை இருக்கிறது.
அண்ணா தி.மு.க. ஆட்சியை எதிர்க்க வேண்டும்; ஆட்சிக்கு பாடம் புகட்ட வேண்டும் என்று ஏற்கெனவே ஏற்காடு இடைத்தேர்தலில் கட்சித் தலைவர் கருணாநிதி பிற கட்சிகளைக் கேட்டுக் கொண்டிருந்தார். ஸ்ரீரங்கம் தேர்தலிலும் அதே வேண்டுகோளை கருணாநிதி முன்வைத்திருக்கிறார். இதை சில அரசியல் கட்சிகள் ஏற்றுக் கொண்டுள்ளன.
இவ்வாறு ஸ்டாலின் பேட்டி அளித்தார்.
பின்னர் திருச்சி மாவட்ட தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.