ஜெ.உடல்நிலை குறித்து அரசு சார்பில் அறிக்கை வெளியிடாதது ஏன்? மு.க.ஸ்டாலின்
ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை முறை குறித்து அரசு சார்பில் அறிக்கை எதுவும் இதுவரை அளிக்கப்படவில்லை என ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உடல்நிலை குறித்து இதுவரை அரசு சார்பில் அறிக்கை வெளியிடப்படவில்லை என்றும் அவரது மரணத்தில் மர்மம் உள்ளதாகவும் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று மாலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து முறையான அறிக்கையானது தாக்கல் செய்யப்படவில்லை. ஜெயலலிதா மரணத்தில் மர்மம் உள்ளது. மறைந்துவிட்டார் என்ற செய்தி வந்த பின்னர் ஆபத்தான கட்டத்தில் இருக்கிறார் என்று மருத்துவமனை அறிக்கை அனுப்பியது.
சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை கழகத்தில் எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெற்று பன்னீர்செல்வம் முதல்வர் தேர்வு செய்யப்பட்ட பின்னர் ஜெயலலிதா மறைவு செய்தியை வெளியிட்டனர். ஆளுநர் மாளிகைக்கு ஒரு பேருந்தில் சென்ற அதிமுக அமைச்சரவை அன்றைய நள்ளிரவில் பதவியேற்றுக் கொண்டது. இவ்வாறு அவர் கூறினார்.