மக்கள் நலன் கருதி பஸ் கட்டணத்தை உடனே குறையுங்கள்- மு.க.ஸ்டாலின் கோரிக்கை
சென்னை: தமிழ்நாட்டில் உடனடியாக பேருந்துக் கட்டணத்தைக் குறைக்குமாறு அதிமுக அரசிற்கு நான் வேண்டுகோள் விடுக்கிறேன் என்று தி.மு.க பொருளாளர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
பஸ் கட்டணத்தை உடனடியாக குறைக்க வேண்டும் என திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தன்னுடைய முகநூல் பக்கத்தில், "கடந்த சில மாதங்களாக கச்சா எண்ணெய் விலை 50 சதவீதம் வரை குறைந்து விட்டது. இதனால் பெட்ரோல் மற்றும் டீசல் விலை 20 சதவீதம் வரை குறைக்கப்பட்டு விட்டது.
போக்குவரத்துச் செலவுகள் குறைந்துள்ள நிலையிலும், 50 முதல் 75 சதவீதம் வரை பேருந்துக் கட்டணங்களை உயர்த்திய அ.தி.மு.க அரசு இதுவரை கட்டணத்தைக் குறைக்கவில்லை.
பஸ் கட்டண உயர்வு என்ற சுமையை சாதாரண மக்களின் தலை மீது அவசரமாகத் தூக்கி வைத்த அ.தி.மு.க அரசு, இப்போது விலை குறைந்திருக்கின்ற நேரத்தில் பேருந்துக் கட்டணத்தைக் குறைத்து, மக்களுக்கு அந்தப் பயன் போய்ச் சேரும் அளவிற்கு நடவடிக்கை எடுக்காமல் அமைதி காக்கிறது.
கச்சா எண்ணெய் விலையிறக்கத்தால் கிடைக்கும் பயன்கள் மக்களைச் சென்றடையாத வகையில் மத்திய அரசும் செயல்படுகிறது. பெட்ரோல், டீசல் விலையை மேலும் குறைப்பதற்குப் பதில் 20,000 கோடி ரூபாய் வருவாயை அரசுக்கு திரட்டிக் கொள்ளும் வகையில் பெட்ரோல்,டீசலுக்கு கலால் வரி விதித்துள்ளது மத்திய அரசு.
நடுத்தர மக்களை பாதிக்கும் அத்தியாவசியத் தேவைகளில் ஒன்றான போக்குவரத்து கட்டணங்களில் உள்ள சுமைகளைக் குறைத்து, கச்சா எண்ணெய் விலையிறக்கத்தின் பயன் மக்களுக்கு கிட்டும் வகையில் செயல்பட மத்திய, மாநில அரசுகளுக்கு மனமில்லை.
உடனடியாக பேருந்துக் கட்டணத்தைக் குறைக்குமாறு அ.தி.மு.க அரசிற்கு நான் வேண்டுகோள் விடுக்கிறேன்'' என்று தெரிவித்துள்ளார்.