அப்துல்கலாமை கேவலப்படுத்தி அரசியல் செய்கிறது பாஜக... ஸ்டாலின் சாடல்!
மறைந்த அப்துல் கலாமை கேவலப்படுத்தி அரசியலுக்காக பாஜக பயன்படுத்துவதாக எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கதிராமங்கலம் : முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாமை பயன்படுத்தி பாஜக அரசியல் ஆதாயம் தேடுவதாக திமுக செயல்தலைவர் ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார்.
தஞ்சாவூர் மாவட்டம் கதிராமங்கலத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களை சந்தித்து ஆதரவு தெரிவித்த பின்னர் பொதுமக்கள் மத்தியில் ஸ்டாலின் உரையாற்றினார்: அப்போது தமிழ்நாட்டில் மதவாதம் திணிக்கப்படுகிறது. அப்துல் கலாம் இந்தியாவின் பாதுகாப்பிற்காகவே இன்னுயிரை துறந்துள்ளார்.
கடந்த வாரம் ராமேஸ்வரம் வந்த பிரதமர் நரேந்திர மோடி அப்துல் கலாம் மணி மண்டபத்தை திறந்து வைத்துள்ளார். அங்கு கலாம் வீணை வாசிப்பது போலவும், அருகில் பகவத் கீதையும் வைக்கப்பட்டுள்ளது. நியாயமாக திருக்குறள் புத்தகத்தை வைத்திருந்தால் பாராட்டியிருக்கலாம். பகவத் கீதைக்கு நாங்கள் எதிர்ப்பானவர்கள் அல்ல. மத்திய அரசு ஜனாதிபதியாக இருந்த அப்துல் கலாமை கேவலப்படுத்தி அரசியலுக்காக அதனை பயன்படுத்திக்கொண்டிருக்கிறார். இதனை தட்டிக் கேட்க முடியாத முதுகெலும்பில்லாத ஆட்சியாக தமிழக அரசு திகழ்கிறது.
இந்த ஆட்சியில் எந்த மக்கள் நலனையும் நாம் எதிர்பார்க்க முடியாது. விரைவில் இந்த ஆட்சி அப்புறப்படுத்தப்பட வேண்டும். அப்படி அப்புறப்படுத்த வேண்டிய நேரத்தில் திமுகவிற்கு ஆதரவை அளித்திடுங்கள். அது வரை காத்திருக்க வேண்டுமா என்றால் திமுக ஆட்சி மலரும் வரை உங்களது கோரிக்கைக்காக போராடுங்கள் நாங்கள் உங்கள் பக்கம் இருக்கிறோம்.
இதற்கும் கூட நான் போராட்டத்தை தூண்டிவிடுவதாகச் சொல்வார்கள் என் மீது வழக்குப் போடுவார்கள். வழக்கு வேண்டுமானால் போட்டுக் கொள்ளுங்கள் அப்படிப் போட்டால் தான் இந்த போராட்டம் தீவிரமாகும் என்றார் ஸ்டாலின்.