திமுக ஆட்சியில் 6112 கொலை.. அதிமுக ஆட்சியில் 7185 கொலை.. புள்ளிவிவரத்தை அடுக்கிய ஸ்டாலின்
சென்னை: முதல்வர் ஜெயலலிதா தனது அறிக்கையில் கூறியிருப்பதுபோல் அதிமுக ஆட்சியில் கற்பழிப்பு குற்றங்கள் 48.97 சதவீதம் குறையவில்லை. கடந்த 2014ல் மட்டும் 1,126 கற்பழிப்புகள் நடந்து கற்பழிப்பு குற்றங்கள் 21.99 சதவீதம் அதிமுக ஆட்சியில் அதிகரித்துவிட்டது. "பொய்" என்ற போர்வையால் "உண்மை" என்ற இமய மலையை சுருட்டி மூட முயன்றிருக்கிறார் என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
தமிழகத்தில் கெட்டுப் போய், செயலிழந்து உள்ள சட்டம் ஒழுங்கை சீர் செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஸ்டாலின் கோரியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் எழுதியுள்ளதாவது:
விண் முட்டும் குற்றங்கள்
நான்கு ஆண்டுகால அதிமுக ஆட்சியில் குற்றங்களின் எண்ணிக்கை விண்ணை முட்டும் அளவிற்கு அதிகரித்துவிட்டது. தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு பெண்கள் உள்ளிட்ட அனைத்து குடிமக்களும் பாதுகாப்பற்ற நிலையில் வாழ்கிறோம் என்று நினைக்கும் அளவிற்கு அச்ச உணர்வை ஏற்படுத்தியிருக்கிறது. ஆனால் அதை மறைத்து, சட்டம் ஒழுங்கு நன்றாக இருப்பது போன்ற ஒரு மாயத்தோற்றத்தை உருவாக்க புள்ளி விவரங்களை திரித்தும், மறைத்தும் முதல்வர் ஜெயலலிதா சட்டசபையில் பேசியிருக்கிறார்.
திமுக ஆட்சியை ஒப்பிடுகையில்
தமிழகத்தில் 2006 முதல் 2011 வரை நடைபெற்ற திமுக ஆட்சியுடன் ஒப்பிடுகையில், கொலைகள், கொலைமுயற்சிகள், கொள்ளைகள், கன்னக்களவுகள், ஆதாயக்கொலைகள், கற்பழிப்புகள் எல்லாமே அதிமுக ஆட்சியில் அதிகரித்துவிட்டன என்பதைத்தான் தேசிய குற்ற ஆவணக்காப்பக புள்ளி விவரங்கள் எடுத்துக்காட்டுகின்றன.
திமுகவில் 7185 கொலை.. அதிமுகவில் 8329 கொலை
உதாரணமாக திமுக ஆட்சியின் முதல் நான்கு வருடத்தில் 6,112 ஆக இருந்த கொலை குற்றங்கள் அதிமுக ஆட்சியின் நான்கு வருடத்தில் (2011-2014) 7,185 ஆக அதிகரித்துவிட்டது. 8,329 ஆக இருந்த கொலை முயற்சி வழக்குகள் 11,845 ஆகிவிட்டது. 419 ஆக இருந்த ஆதாயக்கொலைகள் 508 ஆக உயர்ந்துவிட்டது. 2,751 ஆக இருந்த கொள்ளைகள் 8,119 ஆக அதிர்ச்சியடையும் விதத்தில் அதிகரித்திருப்பதை புள்ளி விவரம் காட்டுகிறது.
வீட்டைப் பூட்டி விட்டு வெளியே போக முடியலை
கன்னக்களவுகள் 15,807லிருந்து 19,696 ஆக எகிறி தமிழகத்தில் யாரும் வீட்டைப் பூட்டிவிட்டு வெளியில் நிம்மதியாக போய் வரமுடியாது என்ற நிலையை ஏற்படுத்தியிருக்கிறது. எல்லாவற்றிற்கும் மேலாக மிகப்பெரிய கொடுமை என்னவென்றால் அதிமுக ஆட்சி காலத்தில் கற்பழிப்பு குற்றங்கள் மட்டும் 3,463 ஆக உயர்ந்து இன்று பெண்களுக்கே பாதுகாப்பு இல்லாத மாநிலமாக தமிழகம் அதிமுக ஆட்சியில் மாற்றப்பட்டிருக்கிறது.
பாதுகாப்பு இருப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்த முயற்சி
ஆனால், பெண்களுக்கு பாதுகாப்பு இருப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்த முதல்வர் முயன்றுள்ளார். அவர் அளித்த தனது பதிலுரையில் 1,126 கற்பழிப்பு குற்றங்கள் என்று உண்மையைக் கூறுவதற்கு பதில் இந்திய தண்டனைச் சட்டப்படி பலாத்காரக் குற்றங்கள் 417 என்று புள்ளி விவரத்தை திரித்துக்கூறியிருக்கிறார்.
மறைத்து விட்டார்
குழந்தைகள் பாலினக்கொடுமை (போஸ்கோசட்டம்) தடுப்புச்சட்டப்படி பதிவு செய்யப்பட்டுள்ள 655 பலாத்கார வழக்குகளை மறைத்துவிட்டார். தன் ஆட்சியில் பலாத்கார குற்றங்கள் குறைந்துவிட்டன என்று ஒரு பொய்த்தோற்றத்தை உருவாக்க இப்படியொரு கணக்கு விளையாட்டை தனது பேச்சில் அரங்கேற்றியிருக்கிறார் முதல்வர்.
உண்மை என்னவென்றால்
உண்மை என்னவென்றால், முதல்வர் கூறியிருப்பதுபோல் அதிமுக ஆட்சியில் பலாத்காரக் குற்றங்கள் 48.97 சதவீதம் குறையவில்லை. கடந்த 2014ல் மட்டும் 1,126 பலாத்காரங்கள் நடந்து பலாத்காரக் குற்றங்கள் 21.99 சதவீதம் அதிமுக ஆட்சியில் அதிகரித்துவிட்டது. பொய் என்ற போர்வையால் உண்மை என்ற இமய மலையை சுருட்டி மூட முயன்றிருக்கிறார். இவை ஒருபுறமிருக்க, மாநிலத்தில் நிகழ்ந்த குற்றங்களை குறைத்துக்காட்டும் பொருட்டு காவல் நிலையங்களில் கொடுக்கப்படும் புகார்கள் அனைத்துமே பதிவு செய்யப்படுவதில்லை என்பது ஊரறிந்த உண்மை.
மிக மோசமாக இருக்கும்
புகார்கள் அனைத்தும் பதிவு செய்யப்பட்டால் தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு நிலைமை இந்திய மாநிலங்களிலேயே மிகவும் மோசமாக இருக்கும் என்று காவல் துறை அதிகாரிகளின் மனசாட்சியே சொல்லும். இவர்கள் என்னதான் மறைத்தாலும், தேசிய குற்ற ஆவணக்காப்பகம் வெளியிட்டுள்ள புள்ளி விவரங்கள் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு முற்றிலும் சிதறிச் சீரழிந்துவிட்டது என்பதற்கு சாட்சியமாக நிற்கிறது.
குரங்கு கையில் சிக்கிய பூமாலை
மிகவும் சிறந்த தமிழ்நாடு காவல் துறை அதிமுகவின் கையில் சிக்கி, குரங்கு கையில் சிக்கிய பூமாலை போல் சீரழிந்து கொண்டிருக்கிறது. நடைபெறும் குற்றங்களை தடுத்து நிறுத்த முடியாமல் காவல் துறையின் கைகளும், கால்களும் அதிமுக என்ற அரசியல் கயிற்றால் முரட்டுத்தனமாக கட்டி வைக்கப்பட்டுள்ளது.
தங்கு தடையின்றி தலையிடும் அதிமுகவினர்
காவல் துறையின் அன்றாடப் பணிகளில் அதிமுகவினர் தங்குதடையின்றி தலையிடுவதால், அதிமுக ஆட்சியில் தமிழக காவல் துறை முற்றிலும் தன் சுதந்திரத்தையும், நம்பகத்தன்மையையும் பறிகொடுத்து நிற்கிறது என்பதைப் பார்க்கும்போது வேதனையாக இருக்கிறது. ஆகவே புள்ளி விவரங்களை திரித்தும், மறைத்தும் அவைக்கும், மக்களுக்கும் தவறான தகவலை கொடுக்கவேண்டாம் என்று தமிழக முதல்வரை நான் கேட்டுக்கொள்கிறேன்.
தகவல் கலப்படம்
இது மாதிரி தகவல் கலப்படத்தை சட்டசபையின் பதிவேடுகளில் ஏறவிடாமல் பாதுகாக்கவேண்டியது அதிமுக அரசின் கடமை என்பதை நினைவுபடுத்தும் அதே வேளையில், தமிழகத்தில் சீரழிந்து கிடக்கின்ற சட்டம் ஒழுங்கை உடனடியாக சீர்செய்ய நடவடிக்கை எடுக்குமாறு அரசை
கேட்டுக்கொள்கிறேன் என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.