எழுத்தாளர் பெருமாள் முருகனுக்கு நம்முடைய ஆதரவு தேவை – மு.க.ஸ்டாலின்
சென்னை: தமிழ்நாட்டில் எழுத்தாளர் பெருமாள் முருகனுக்கு எதிரான போராட்டத்திற்கு மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்த அறிக்கையில், "சமூக மற்றும் மதம் உள்ளிட்ட பல விஷயங்கள் பற்றி ஆயிரமாயிரம் ஆண்டுகளாக ஆரோக்கியமான விவாதங்கள் நடைபெற்று வரும் மாநிலமாக தமிழகம் திகழ்ந்து கொண்டிருக்கிறது.
தமிழ் நாவலாசிரியரும் எழுத்தாளருமான பெருமாள் முருகனை குறிவைத்து நடத்தப்படும் சகிப்புத்தன்மையற்றவர்களின் தாக்குதல்களும் போராட்டங்களும் அடிப்படைவாதிகளால் ஆதரிக்கப்பட்டு ஊக்குவிக்கப்படுகிறது. இவர்களுடைய ஒரே நோக்கம் அமைதியாகவும், சுதந்திரமாகவும் இருந்து கொண்டிருக்கும் தமிழக மக்கள் மத்தியில் பிரிவினையை உருவாக்குவது மட்டுமே.
நாகரிகத்தின் உணர்வுகளையும், இலக்கியங்களில் கூறப்பட்டிருக்கும் பண்புகளையும் மதிக்கும் சகிப்புத் தன்மை உடைய பெருமைக்குரியவர்கள் தமிழர்கள். மதம் பற்றியோ, சாதி பற்றியோ நடக்கும் ஆரோக்கியமான விவாதங்கள் மற்றும் மனம் திறந்த ஆய்வுகள் போன்றவற்றிற்கு நாம் என்றுமே அஞ்சியதில்லை.
மற்றவர்களின் உணர்வுகளை எப்போதும் மதிக்க தெரிந்த நாம் அரசியல் சட்டத்தில் அளிக்கப்பட்டுள்ள தனி நபரின் கருத்து சுதந்திரத்தை நிலைநாட்டுவதற்கு உறுதியுடனும் ஒற்றுமையுடனும் நாம் துணை நிற்கிறோம்.
கடவுள் மறுப்பு, இந்து மதம், கிறித்துவ மதம் மற்றும் இஸ்லாம் போன்றவற்றின் பெயரில் நாம் வன்முறையிலும் ஈடுபடுவதில்லை. அப்படி வன்முறையில் ஈடுபடுவோருக்கு துணை போவதும் இல்லை. ஜனநாயக ரீதியான அமைப்புகள் மூலம் வழங்கப்படும் கருத்துக்களையும், அதற்கு எதிர் கருத்துகளையும் நாம் ஆதரிக்கிறோம்.
சமீபத்தில் கருத்து சுதந்திரத்திற்காக பாடுபட்டவர்களை சுட்டு கொன்ற மத அடிப்படைவாதிகளின் செயலை எதிர்த்து நடத்தப்பட்ட பிரம்மாண்டமான பேரணி மூலம் சுதந்திரம், சகோதரத்துவம் மற்றும் ஒற்றுமை போன்றவற்றிற்கு ஒரு பொருத்தமான முன்னுதாரணத்தை பிரான்ஸ் நாடு நமக்கு எடுத்துக்காட்டி இருக்கிறது. இந்த நேரத்தில் வோல்ட்டயரின் வாசகமான, நீங்கள் பேசுவதை நான் ஏற்று கொள்ளாவிட்டாலும், உங்கள் பேச்சுரிமையை பாதுகாக்க என் உயிரையும் கொடுக்க நான் தயாராக உள்ளேன் என்பதை நினைவில் வைத்துக் கொள்ள இது சரியான தருணம்.
நான்கு வருடங்களுக்கு முன்பு வெளியிட்ட புத்தகத்திற்கு எதிரான வன்முறையில் ஈடுபடுவோர் ஒன்றை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். தமிழ் நாடும் அதன் மக்களும், மதத்தின் பெயரால் நடக்கும் இந்த வன்முறைகளை ஒரு போதும் மன்னிக்க மாட்டார்கள். தமிழக மக்களின் கருத்து சுதந்திரத்தை சீர்குலைக்க யாரையும் அனுமதிக்க மாட்டோம்.
மதச்சார்பின்மை போற்றும் ஜனநாயக பேரியக்கமான தி.மு.க. இது போன்ற மத அடிப்படைவாதத்திற்கு என்றும் எதிராக இருக்கும். இந்திய அரசியல் சட்டம் 19 இன் கீழ் வழங்கப்பட்டுள்ள பேச்சுரிமை மற்றும் கருத்துரிமையை பாதுகாக்க தி.மு.க இறுதி வரை எவ்வித தொய்வுமின்றி உறுதியாக துணை நிற்கும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.