அனைத்துக் கட்சி கூட்டம் பெயரில் அரசியல் ஆதாயம்.. ஸ்டாலின் மீது சி.ஆர்.சரஸ்வதி சாடல்
சென்னை: காவிரி விவகாரத்தில் அனைத்துக் கட்சிக்கூட்டம் என்ற பெயரில் அரசியல் ஆதாயம் தேட முயற்சிப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் மீது அதிமுக செய்தி தொடர்பாளர் சி.ஆர்.சரஸ்வதி குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.
காவிரி விவகாரம் குறித்து கர்நாடக அரசு பல்வேறு சமயங்களில் அனைத்துக் கட்சி கூட்டங்களை நடத்தியுள்ளது. ஆனால், தமிழக அரசு ஒருமுறையும் கூட்டவில்லை.
இதையடுத்து அனைத்துக்கட்சி கூட்டத்தை பிரதான எதிர்க்கட்சியான திமுக தலைமையில் கூட்ட உள்ளதாக அதன் பொருளாளரும், எதிர்க்கட்சி தலைவருமான ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
வரும் 25ம் தேதி அண்ணா அறிவாலயத்தில் வைத்து அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற உள்ளதாக அறிவித்துள்ள ஸ்டாலின், அனைத்துக் கட்சிகளும் பங்கேற்க அழைப்புவிடுத்துள்ளார்.
திமுக கூட்டும் அனைத்துக்கட்சி கட்டத்திற்கு பா.ஜ.,விற்கும் அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது. ஆனால், காவிரி விவகாரம் தொடர்பாக திமுக அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டினால் அதில் பாஜக பங்கேற்காது எனவும், தமிழக அரசு கூட்டும் அனைத்துக்கட்சி கூட்டத்தில் மட்டுமே பாஜக பங்கேற்கும் எனவும் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கடந்த வாரம் கூறி இருந்தார்.
இதனால் அக்டோபர் 25ம் தேதி திமுக கூட்டும் அனைத்துக்கட்சி கூட்டத்தை பாஜக புறக்கணிக்கும் என கூறப்படுகிறது. இந்த அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் காங்கிரஸ் கட்சி பங்கேற்கும் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.
இதுகுறித்து தொலைக்காட்சி சேனல் ஒன்றுக்கு கருத்து தெரிவித்துள்ள சி.ஆர்.சரஸ்வதி காவிரி விவகாரத்தில் அனைத்துக் கட்சிக்கூட்டம் என்ற பெயரில் அரசியல் ஆதாயம் தேட முயற்சிப்பதாக குற்றம்சாட்டியுள்ளார்.