ரஜினி அரசியலுக்கு வருவது இருக்கட்டும் பாஸ்.. தீபாவின் அடுத்த அதிரடியை பாருங்க
எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை கட்சியின் மாவட்ட செயலாளர்களை மே 22ம் தேதி அந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் அறிவிக்க உள்ளார்.
சென்னை: தமிழக அரசியலில் பல்வேறு பரபரப்புகள் அரங்கேறி வரும் நிலையில் மேட் பேரவையின் பொதுச் செயலாளர் தீபாவும் தனது பங்கிற்கு கட்சியின் மாவட்ட செயலாளர்களை அறிவித்து கட்சியை ஸ்திரப்படுத்தும் பணியில் இறங்கியுள்ளார்.
தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் காலமானார். அதனைத்தொடர்ந்து, அரசியலில் குதித்த அவரது அண்ணன் மகள் தீபா, எம்ஜிஆர்-அம்மா-தீபா பேரவை என்ற பேரவையை தொடங்கினார். கடந்த பிப்ரவரி மாதம் ஜெயலலிதா சமாதி முன்பு தொடங்கிய தீபாவின் கட்சிக்கு முதலில், பொதுமக்கள் மத்தியில் செல்வாக்கு காணப்பட்ட போதிலும், நாளடைவில் அது மங்கியது.
இதனிடையே ஆர்.கே நகர் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் சுயேட்சையாக களமிறங்கி, வீதிவீதியாக சென்று பிரச்சாரத்தில் ஈடுபட்டார். தேர்தலில் போட்டியிடுவதால் தனக்கு தொலைபேசியில் கொலை மிரட்டல் விடுக்கப்படுவதாக குற்றம்சாட்டினார்.
கணவருடன் பிரச்சினை
இதனிடையே, பேரவைக்கு நிர்வாகிகளை நியமனம் செய்ததில் அவருக்கும் அவரது கணவர் மாதவனுக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டதாக கூறப்பட்டது. இதையடுத்து, பேரவையில் இருந்து வெளியேறிய மாதவன், தனிக்கட்சியை துவங்கினார். மேலும், பேரவைக்கு உறுப்பினர் சேர்க்கை படிவம், ஆர்கே நகர் இடைத்தேர்தல் செலவு ஆகியவை மூலம் பணமோசடி செய்தார் என தீபா மீது புகாரும் அளிக்கப்பட்டது.
பொறுப்புகள்
இந்நிலையில் கடந்த மாதம் பேரவைக்கான உறுப்பினர்கள் தேர்வு நடைபெற இருந்த நிலையில் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டதையடுத்து ஏப்ரல் மாத்ம் 29ம் தேதி முதல் நேரடியாக மனுக்களை பெற்று விண்ணப்பித்தவர்களின் செயல்பாடுகளுக்கு ஏற்ப பரிசீலனை செய்து பொறுப்புகள் வழங்கப்படும் என்று அறிவித்திருந்தார்.
லட்சக்கணக்காம்
இதனிடையே ஜெ. தீபா இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் : தமிழகம் முழுவதிலிருந்து லட்சக்கணக்காணத் தொண்டர்களும்,முன்னணி நிர்வாகிகளும் நம்முடைய புரட்சித்தலைவி அம்மா அவர்களுடைய மறைவிற்குப் பின் என்னை தலைமையேற்க்க கோரி அன்பான அழைப்பு விடுத்ததோடு அம்மா அவர்களின் கனவுநனவாக தொடர்ந்து அயராது இயக்கப் பணியாற்றி வருகிறார்கள்.
மாவட்ட செயலர்கள்
இயக்கத்தை கடமை,கண்ணியம்,கட்டுப்பாட்டோடு நெறிப் படுத்த முதல் கட்டமாக மாவட்டச் செயலாளர்கள் நேர்காணல் சிறப்பாக நடைபெற்று முடிந்தது.தற்போது நானும் உயர்மட்டக்குழு உறுப்பினர்களும் மாவட்டச் செயலாளர் பரிசீலனையில் ஈடுப்பட்டுள்ளோம். மாவட்டச் செயலாளர்கள் அறிவிப்பு வருகிற 22-05-2017 திங்கள் கிழமை அன்று முறையாக அறிவிக்கப்படும் என தொண்டர்களுக்கு மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன், என்று கூறியுள்ளார்.