மனைவிக்கு ஆதரவாக களம் குதித்தார் கணவர் மாதவன்.. போயஸில் கூடும் பரபரப்பு
வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு தீபாவின் கணவர் மாதவன் போயஸ் கார்டனுக்கு மாதவன் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை: போயஸ் கார்டனுக்கு சொந்தம் கொண்டாடிக் கொண்டு ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா அங்கு நுழைய முயன்றார். இவருடன் அவரது கணவர் மாதவனும் தடுப்பை மீறி உள்ளே செல்ல முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வீடு வேதா நிலையம் என்ற பெயரில் போயஸ் தோட்டத்தில் உள்ளது. ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர் அந்த வீட்டில் சசிகலா மற்றும் குடும்பத்தினர் வாழ்ந்து வந்தனர்.
சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூர் சிறைக்கு சென்றனர். இதன் பிறகு அந்த வீட்டில் யாரும் வசிக்காமல் இருந்தனர்.
தீபா வருகை
இந்நிலையில், போயஸ் கார்டனை நினைவு இல்லமாக மாற்ற வேண்டும் என்று அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. ஆனால் அந்த வீடு தனக்கு தான் சொந்தம் என்று கூறி ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா போயஸ் தோட்டத்திற்கு வந்தார்.
போலீசார் மறுப்பு
கார்டனுக்குள் தீபா நுழைய முயன்ற போது போலீசார் அவரை தடுத்து நிறுத்தினார்கள். மேலும் அவரது உடன் வந்த தீபா ஆதரவாளர்களும் அனைவரும் பாதியிலேயே தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர்.
கைகோர்த்த மாதவன்
இதனைத் தொடர்ந்து, தீபாவின் கணவர் மாதவனும் போயஸ் கார்டனுக்கு வந்தார். அவரையும் போலீசார் தடுத்து நிறுத்தினர். ஆனால் அதனை மீறி மாதவன் தடுப்பைத் தாண்டி போயஸ் கார்டனுக்குள் நுழைந்தார்.
தள்ளுமுள்ளு
தீபா ஆதரவாளர்களை தடுத்து நிறுத்தியது போன்றே மாதவனுடன் வந்தவர்களையும் போலீசார் தடுத்து நிறுத்தினார்கள். இதனால் போலீசாருக்கும் அவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
பேனா மட்டும் போதாது
ஜெயலலிதாவின் சொத்து குறித்து பேச்சு எழுந்தபோது அத்தையின் பேனா மட்டும் எனக்கு போதும் என்று தீபா கூறினார். ஆனால் தற்போது தனது கணவர் மாதவனுடன் இணைந்து கொண்டு போயஸ் கார்டனை கைப்பற்ற வந்திருப்பது தமிழக அரசியல் சூழலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.