சுவாதி கொலை- சிபிஐ விசாரணை கோரிய வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு
சென்னை: சாப்ட்வேர் இன்ஜினியர் சுவாதி கொலை வழக்கை சிபிஐக்கு மாற்ற கோரி ராம்குமாரின் தாயார் புஷ்பம் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
சுவாதி கொலை வழக்கில் நெல்லை ராம்குமார் தான் குற்றவாளி என கூறி வருகிறது போலீஸ் தரப்பு. ஆனால் உண்மை குற்றவாளிகளை தப்பவிடுவதற்காக ராம்குமார் குற்றவாளியாக்கப்படுகிறார் என்கின்றனர் அவரது பெற்றோர்கள்.
இந்த நிலையில் சுவாதி கொலை வழக்கு தொடர்பாக அடுத்தடுத்து பல்வேறு புதிய தகவல்களை பிரான்ஸில் உள்ள பெரியாரிஸ்டான தமிழச்சி பகிரங்கப்படுத்தி வருகிறார். இக்கொலை வழக்கில் போலீஸ் விசாரணைக்கு ஆஜராகி சில உண்மைகளை சொன்னதால் கொலை மிரட்டலுக்கு ஆளான பெண் ஒருவர் வெளிநாட்டுக்கு தப்பி ஓடிவிட்டார்.
இதனிடையே சுவாதி கொலை வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரி ராம்குமாரின் தாயார் புஷ்பம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். இம்மனு மீது கடந்த சில நாட்களாக விசாரணை நடைபெற்றது.
இருதரப்பு வாதங்களும் இன்று நிறைவடைந்தன. இதையடுத்து வழக்கின் தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.