அந்நிய செலாவணி மோசடி வழக்கு: தினகரன் மீதான குற்றச்சாட்டு பதிவை ரத்து செய்தது ஹைகோர்ட்
அந்நிய செலாவணி மோசடி வழக்கில் டிடிவி தினகரன் மீது பதிவு செய்யப்பட்ட குற்றச்சாட்டுகளை ரத்து செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை: அந்நிய செலாவணி மோசடி வழக்கில் டிடிவி தினகரன் மீது பதிவு செய்யப்பட்ட குற்றச்சாட்டுகளை ரத்து செய்துவிட்டு புதிய குற்றச்சாட்டுகளை பதிவு செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
1996ம் ஆண்டு வெளிநாட்டு நிறுவனங்களில் இருந்து சட்டவிரோதமாக பணம் பெற்றது தொடர்பாக டிடிவி தினகரன் மீது அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்தது. இது தொடர்பான வழக்குகள் 20 ஆண்டுகளாக எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு விசாரணைக்காக தினகரன் சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் 2 முறை ஆஜராகியும் உள்ளார்.
இந்நிலையில் டிடிவி தினகரன் தரப்பில் எழும்பூர் நீதிமன்றத்தில் தங்கள் தரப்பு வாதங்களைக் கேட்காமல் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படுவதாக குற்றம்சாட்டி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை கடந்த 10 நாட்களுக்கு முன்னர் விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் குற்றச்சாட்டு பதிவிற்கு இடைக்காலத் தடை விதித்தது.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, டிடிவி தரப்பு வழக்கறிஞர் குற்றச்சாட்டுகளை எழும்பூர் நீதிமன்றத்தில் பதிவு செய்யும் போது அமலாக்கத்துறையின் வாதம் மட்டுமே கேட்கப்படுவதாக கூறினார். தங்கள் தரப்பு வாதத்தை கேட்காமல் பொய்யான குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படுவதாகவும் அவர் கூறினார்.
இதற்கு கடும் ஆட்சேபனை தெரிவித்த அமலாக்கத்துறை வழக்கறிஞர், குற்றச்சாட்டு பதிவின் போது எந்த மறுப்பையும் தினகரன் தரப்பு கூறவில்லை என்றார். மேலும் தற்போது உயர்நீதிமன்றத்தில் பொய் கூறுவதாகவும் அமலாக்கத்துறை வழக்கறிஞர் தெரிவித்தார்.
இதனையடுத்து இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி எம்.எஸ். ரமேஷ், 20 ஆண்டுகளாக இந்த வழக்கு நிலுவையில் இருப்பது ஏன் என்று கேள்வி எழுப்பினர். ஏப்ரல் 19ம் தேதி வரை பதிவான குற்றச்சாட்டுகளை ரத்து விட்டு, மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் முன்னிலையில் ஜூலை 31ம் தேதி புதிய குற்றச்சாட்டுபதிவு செய்ய வேண்டும் என்று எழும்பூர் நீதிமன்றத்திற்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டார். மேலும் இந்த வழக்கில் தினமும் விசாரணை நடத்தி 3 மாதத்தில் வழக்கு விசாரணையை முடித்து வைக்கவும் ஹைகோர்ட் உத்தரவிட்டுள்ளது.