சேலம் கட்சராயன் ஏரியை பார்க்க ஸ்டாலினுக்கு அனுமதி- ஹைகோர்ட் உத்தரவு
சேலம் கட்சராயன் ஏரியை பார்வையிட எதிர்கட்சித்தலைவர் ஸ்டாலினுக்கு உயர்நீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசு ஸ்டாலினை தடுக்கக் கூடாது என்றும் நீதிமன்றம் உத்தரவு.
சென்னை: சேலம் கட்சராயன் ஏரியை பார்வையிட ஸ்டாலினுக்கு அரசு அனுமதி மறுக்கக்கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதியில் உள்ள கட்சராயன் ஏரியை பார்வையிட்டு பின்னர் சேலத்தில் நடக்கவிருந்த மனிதச் சங்கிலி போராட்டத்தில் பங்கேற்க கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஸ்டாலின் திட்டமிட்டிருந்தார். ஆனால் ஏரியை பார்வையிடுவதற்கு காவல்துறை அனுமதி மறுத்திருந்தது.
கடந்த வாரம் சென்னையிலிருந்து கோவை சென்ற ஸ்டாலின், கோவையில் இருந்து சேலம் போகும் வழியில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். இதுபற்றி உடனடியாக சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது
சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக சட்டப்பிரிவு சார்பில் வழக்கறிஞர் கிரிராஜன் தாக்கல் செய்த மனுவில், தமிழக முதல்வர் கே.பழனிசாமி யின் தொகுதியான எடப்பாடியில் கொங்கணாபுரம் அருகே உள்ள கச்சராயன்பாளையம் ஏரியை திமுகவினர் தூர்வாரி சீரமைத்துள்ளனர். அந்த ஏரியில் அதிமுகவினர் முறைகேடாக மணல் அள்ளி வந்தனர்.
இதனால் அந்த ஏரியைப் பார்வையிடுவதற்காக, ஸ்டாலின் கடந்த ஜூலை 27ஆம் தேதி கோவை வழியாக சேலம் செல்ல முற்பட்டார். வழியிலேயே அவரை போலீஸார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.
முதல்வரின் தொகுதிக்கு ஸ்டாலின் செல்லக்கூடாது என்பதற்காகவே உள்நோக்கத்துடன் அவரைத் தடுத்து கைது செய்துள்ளனர். வரும்காலங்களில் தமிழகம் முழுவதும் உள்ள ஏரி, குளம், கண்மாய் போன்ற நீர்நிலைகளை திமுக தூர்வார தமிழக அரசு தடை விதிக்கக் கூடாது, இடையூறு செய்யக்கூடாது. ஸ்டாலின் ஏற்கெனவே மத்திய அரசின் உயர் பாதுகாப்பு பிரிவில் இருக்கிறார்.
தூர்வாரும் பணிகளைப் பார்வையிடச் செல்லும் அவருக்கு தமிழக அரசு அதிகாரிகள், போலீஸார் எவ்வித இடையூறும் செய்யக் கூடாது, தடுக்கக்கூடாது. பேச் சுரிமை, சுதந்திரமாகச் செல்லுதல் போன்றவை அடிப்படை உரிமைகள். அதை தமிழக அரசு தடுக்க முடியாது என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த வழக்கு உயர்நீதிமன்ற நீதிபதி துரைசாமி, முன்பாக கடந்த வாரம் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு அளித்துள்ள பதிலில், ஸ்டாலினுடன் எந்த கவுரவ பிரச்னையும் இல்லை என்று குறிப்பிட்டுள்ளது.
சட்ட ஒழுங்கு பிரச்சினை ஏற்படக் கூடாது என்பதற்காகவே அவர் தடுத்து நிறுத்தப்பட்டதாகவும், தமிழக அரசின் செயல்பாடுகளில் தலையிட்டு ஸ்டாலின் விளம்பரம் தேட முயற்சிப்பதாக தமிழக அரசு பதிலளித்துள்ளது.
ஏரியை பார்வையிட எத்தனை பேரை உடன் அழைத்து செல்வது என பதிலளிக்க ஸ்டாலினுக்கும், ஸ்டாலினுடன் எத்தனை பேரை அனுமதிக்க முடியும் என தமிழக அரசும் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. நீர்நிலைகளை ஆராய எதிர்க்கட்சி தலைவருக்கு அனுமதி மறுப்பது சட்டவிரோதமானது என்றும் உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது மு.க.ஸ்டாலினுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதியளித்து நீதிபதி உத்தரவிட்டார். 25 பேருடன் ஏரியை ஸ்டாலின் பார்வையிடலாம் என்று நீதிபதி துரைசாமி அனுமதி வழங்கினார். ஏரியை பார்வையிடச் செல்லும் போது ஸ்டாலினை தடுக்கக்கூடாது என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.