நம்பிக்கை வாக்கெடுப்பு எதிரான ஸ்டாலின் வழக்கு: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஹைகோர்ட் நோட்டீஸ்!
நம்பிக்கை வாக்கெடுப்பு செல்லாது என அறிவிக்கக் கோரி எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்த வழக்கில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
சென்னை: சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தியதை செல்லாது என அறிவிக்கக் கோரி எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்த வழக்கில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, சபாநாயகர் தனபால், ஆளுநரின் செயலர், தலைமை செயலர், சட்டசபை செயலர் ஆகியோர் பதில் தர சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும் சட்டசபை நம்பிக்கை வாக்கெடுப்பு வீடியோவைத் தாக்கல் செய்யவும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சட்டசபையில் கடந்த 18-ந் தேதி முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அரசு நம்பிக்கை வாக்கெடுப்பு கோரியது. இதை ரகசிய வாக்கெடுப்பாக நடத்த வேண்டும் என திமுக தரப்பில் வலியுறுத்தப்பட்டது.
ஆனால் சபாநாயகர் தனபால் இதை நிராகரித்துவிட்டார். இதனால் ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்.எல்.ஏக்கள் சட்டசபைக்குள்ளேயே போராட்டம் நடத்தினர்.
சட்டசபையில் தாக்குதல்
போராட்டம் நடத்திய திமுக எம்.எல்.ஏக்களை சட்டசபை மார்ஷல் சீருடையில் வந்த போலீஸ் உயர் அதிகாரிகள் குண்டுகட்டாக தூக்கி வெளியேற்றினர். அப்போது ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்.எல்.ஏக்கள் கடுமையாக தாக்கப்பட்டனர்.
ஹைகோர்ட்டில் வழக்கு
இதனிடையே சென்னை உயர்நீதிமன்றத்தில் மு.க.ஸ்டாலின் மற்றும் வழக்கறிஞர்கள் சமூக நீதிப் பேரவை தலைவர் கே. பாலு உள்ளிட்டோர் நம்பிக்கை வாக்கெடுப்பு முறைக்கு எதிராக வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை கடந்த வாரம் தலைமை நீதிபதி (பொறுப்பு) ஜி.ரமேஷ், நீதிபதி ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பாக விசாரணைக்கு வந்தது.
வீடியோ காட்சிகள்
அப்போது, சட்டசபை சம்பவங்கள் தொடர்பான வீடியோ காட்சிகளைத் தாக்கல் செய்ய ஸ்டாலின் தரப்புக்கு நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர். இதனால் வீடியோ காட்சிகளைத் தரக்கோரி சட்டசபை செயலருக்கு ஸ்டாலின் கடிதம் அனுப்பியிருந்தார்.
இன்று மீண்டும் விசாரணை
இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று இந்த வழக்கின் விசாரணை மீண்டும் நடைபெற்றது. அப்போது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, சபாநாயர் தனபால், ஆளுநரின் செயலர், தலைமைச் செயலர், சட்டசபை செயலர் ஆகியோர் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ள்து. மேலும் சட்டசபை வாக்கெடுப்பு வீடியோவை தாக்கல் செய்யவும் சென்னை உயர்நீதிமன்றம் இன்று உத்தரவிட்டு இவ்வழக்கின் விசாரணையை மார்ச் 10-ந் தேதிக்கு ஒத்தி வைத்தனர் நீதிபதிகள்.