ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் முன் ஜாமீன் நிபந்தனையை தளர்த்த ஹைகோர்ட் மறுப்பு!
சென்னை: தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கான முன் ஜாமீன் நிபந்தனைகளை தளர்த்த சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது. இளங்கோவனுக்கு உரிய பாதுகாப்பு வழங்கவேண்டும் என்றும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மீது, தமிழக காங்கிரஸ் கமிட்டி அறக்கட்டளை அலுவலக பெண் ஊழியர் வளர்மதி, சென்னை காவல்துறை ஆணையரிடம் அளித்த மோசடி புகாரின் பேரில் அவரை கைது செய்ய, காவல்துறையினர் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வந்தனர்.
இதைத்தொடர்ந்து, முன்ஜாமீன் கேட்டு ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், மதுரையில் தங்கியிருக்கும்படியும், தல்லாகுளம் காவல் நிலையத்தில் தொடர்ந்து 10 நாட்கள் கையெழுத்திட வேண்டும் என்றும் நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கியது.
அதன்படி, தல்லாகுளம் காவல் நிலையத்தில் கையெழுத்திடுவதற்காக நேற்று இளங்கோவன் அங்கு வருவதை அறிந்து, நூற்றுக்கணக்கான அதிமுகவினர் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த எதிர்ப்பையும் மீறி இளங்கோவன் கையெழுத்திட்டு சென்றார். இந்நிலையில், இரண்டாவது நாளாக தல்லாக்குளம் காவல் நிலையத்தில் இளங்கோவன் இன்றும் கையெழுத்திட்டார்.
இதனிடையே தனது உயிருக்கு பாதுகாப்பு இல்லை என்றும் முன்ஜாமீன் நிபந்தனைகளை தளர்த்தக் கோரியும், ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் நேற்று தாக்கல் செய்த மனுவை இன்று அவசர மனுவாக எடுத்து விசாரித்தது.
முன் ஜாமீன் வழங்க விதிக்கப்பட்ட நிபந்தனைகளை தளர்த்த முடியாது என்று கூறி மறுத்துவிட்ட நீதிபதி, தல்லாகுளம் காவல்நிலையத்துக்குக் கையெழுத்திட செல்லும் இளங்கோவன், 2 வழக்குரைஞர்களுடன் செல்லலாம் என்றும், அவருக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.