இளங்கோவனின் "மதுரைக் காண்டம்" முடிந்தது... ஜாமீன் நிபந்தனையை தளர்த்தியது உயர்நீதிமன்றம்
சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவனை மதுரையில் தங்கியிருக்குமாறு விதிக்கப்பட்டிருந்த நிபந்தனையை சென்னை உயர்நீதிமன்றம் தளர்த்தியுள்ளது. இதனால் இனி அவர் மதுரையில் தங்கிக் கையெழுத்துப் போடத் தேவையில்லை.
அதேசமயம், போலீஸ் விசாரணைக்கு ஈவிகேஎஸ் இளங்கோவன் ஒத்துழைப்பு தராவிட்டால் கோர்ட் உதவியை போலீஸார் நாடலாம் என்று உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சென்னை காமராஜர் அரங்கத்தில் பணியாற்றி வந்த வளர்மதி என்ற பெண் கொடுத்த புகாரைத் தொடர்ந்து ஈவிகேஎஸ் இளங்கோவன், காமராஜர் அரங்கத்தின் மேலாளர் நாராயணன் ஆகியோர் மீது தேனாம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் இளங்கோவனுக்கும், நாராயணனுக்கும் நிபந்தனை அடிப்படையில் சென்னை உயர்நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கியது. மேலும் இருவரும் மதுரையில் தங்கியிருந்து தல்லாகுளம் போலீஸ் நிலையத்தில் தினசரி கையெழுத்திடவேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டது.
அதன்படி மதுரை வந்த இளங்கோவன் ஹோட்டலில் தங்கி கையெழுத்துப் போட்டு வந்தார். இந்த நிலையில், ஜாமீன் நிபந்தனையைத் தளர்த்தக் கோரி இளங்கோவனும், நாராயணனும் உயர்நீதிமன்றத்தை நாடினர். இந்த மனுவை விசாரித்த இன்று நீதிபதி எஸ்.வைத்தியநாதன், இருவருக்கும் விதிக்கப்பட்ட நிபந்தனையை தளர்த்தி உத்தரவிட்டார். மதுரையில் தங்கியிருக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் நீதிபதி உத்தரவில் தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து மதுரையிலிருந்து கிளம்பி சென்னை வருகிறார் இளங்கோவன்.