வழக்கறிஞர்கள் சட்ட திருத்தம் தற்காலிகமாக நிறுத்தி வைப்பு: தலைமை நீதிபதி கவுல்
சென்னை: வழக்கறிஞர்கள் தொடர்பான சட்ட திருத்தம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கவுல் அறிவித்துள்ளார்.
சென்னை உயர்நீதிமன்றம் வழக்கறிஞர் சட்டம் 1961 பிரிவு34(1)ல் பல்வேறு திருத்தங்களை கடந்த மே மாதம் அறிவித்தது. இதன்படி தவறு செய்யும் வழக்கறிஞர்களை மாவட்ட/உயர்நீதிமன்ற நீதிபதிகளே தண்டிக்கலாம். வழக்கறிஞர் தொழில் செய்ய தற்காலிகமாகவோ, நிரந்தரமாகவோ தடை செய்யலாம் என்பது உள்ளிட்ட அம்சங்கள் அதில் இடம்பெற்றிருந்தன.
இதற்கு வழக்கறிஞர்கள் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இச்சட்டத்தை திரும்பப் பெறக் கோரி பல்வேறு கட்ட போராட்டங்களையும் வழக்கறிஞர்கள் நடத்தினர்.
முற்றுகைப் போராட்டம்
இதன் உச்சகட்டமாக வழக்கறிஞர்கள் கூட்டு நடவடிக்கைக் குழு சார்பில் உயர் நீதிமன்ற முற்றுகைப் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதே நேரத்தில் இந்திய பார் கவுன்சில் தலைவர் மன்னன் குமார் மிஸ்ரா, 126 தமிழக வழக்கறிஞர்களை சஸ்பென்ட் செய்து உத்தரவு பிறப்பித்ததால் வழக்கறிஞர்களின் போராட்டம் சூடு பிடித்தது.
இரவில் விடுதலை
சென்னை உயர்நீதிமன்றத்தை நேற்று காலை முதல் இரவு வரை பல்வேறு சங்கங்களைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் முற்றுகையிட்டனர். இதில் கலந்து கொண்ட பெண் வழக்கறிஞர்கள் 15 பேர் உட்பட 596 பேர் கைதாகி விடுதலை செய்யப்பட்டனர்.
விதி குழுவிடம்தான் முறையிடனும்...
பொதுச்சொத்துக்கு சேதம் விளைவித்தல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளில் 5 வழக்கறிஞர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். இதனிடையே சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், புதிய சட்டத்திருத்த விதிக்கு எதிராக தொடர்ந்து வழக்கறிஞர்கள் போராட்டத்தில் ஈடுபடுவதை ஏற்க முடியாது. இந்த பிரச்சனை குறித்து வழக்கறிஞர்கள் விதி குழுவிடம் முறையிடாமல் போராட்டம் நடத்துவதை ஏற்க முடியாது. சரியான நபர்களின் வழிகாட்டுதல்கள் இல்லாததால் வழக்கறிஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் எனக் கூறி இருந்தார்.
சட்ட திருத்தம் நிறுத்தம்
இந்நிலையில் வழக்கறிஞர்களின் போராட்டம் எதிரொலியாக சர்ச்சைக்குரிய வழக்கறிஞர்கள் தொடர்பான சட்ட திருத்தம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படும் என தலைமை நீதிபதி கவுல் இன்று அறிவித்தார். வழக்கறிஞர்களின் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வரும் வகையில் இந்த அறிவிப்பை அவர் வெளியிட்டுள்ளார்.