உயர்நீதிமன்றத்தில் பரபரப்பு.. பார் கவுன்சில் மீது செருப்பு, கல்வீசி தாக்கிய வக்கீல்கள்!
சென்னை : தமிழ்நாடு வழக்கறிஞர் சங்கத்திற்கு அனுமதி வழங்கியதற்கு கண்டனம் தெரிவித்து, சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தினர் பார்கவுன்சில் மீது செருப்பு மற்றும் கல் வீசி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சுமார் 500க்கும் மேற்பட்ட சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தினர் இன்று தமிழ்நாடு பார்கவுன்சிலை முற்றுகையிட்டனர். பார் கவுன்சிலானது, தமிழ்நாடு வழக்கறிஞர்கள் சங்கத்திற்கு அனுமதி வழங்கியதற்கு கண்டனம் தெரிவித்து அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும், பார்கவுன்சிலைக் கண்டித்து வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பிலும் ஈடுபட்டனர். சுமார் 500க்கும் அதிகமான வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தைச் சுற்றி பேரணியாக சென்றனர்.
முற்றுகையிட முயன்ற வழக்கறிஞர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவங்களால் பாரிமுனையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.