மாணவர்கள் சட்டத்தை கையில் எடுத்தது தவறு.. லத்திசார்ஜ் வழக்கை அவசரமாக விசாரிக்க முடியாது: ஹைகோர்ட்
சென்னை: பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் மீது போலீஸ் தடியடி நடத்திய விவகாரத்தை அவசர வழக்காக எடுத்து விசாரிக்க சென்னை ஹைகோர்ட் மறுத்துவிட்டது. மேலும், சட்டத்தை கையில் எடுத்து மாணவர்கள் போராட்டத்தில் இறங்கியதை ஏற்க முடியாது என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சென்னை, அமைந்தகரையில் உள்ள பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி மற்றும் மக்கள் அதிகாரம் அமைப்பினர் இணைந்து மதுவிலக்கை அமல்படுத்தக்கோரி நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
100க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஹாரிங்டன் சாலை செனாய் நகரில் இருந்த டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டனர். சிலர், கடை மீது கற்களை வீசி தாக்கினர். மதுபாட்டில்களை உடைத்தனர். சிலர் மது பாட்டில்களோடு ஓட்டம் பிடித்ததாகவும் கூறப்படுகிறது. அப்போது மாணவர்கள் மீது போலீஸார் தடியடி நடத்தினர்.
மாணவர்களுக்கு ஆதரவாக வந்த மாணவிகளும் தடியடிக்கு தப்பவில்லை. போலீசார் முரட்டுத்தனமாக நடந்து கொண்டதாக எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டியுள்ளனர்.
இந்நிலையில், கல்லூரி மாணவர்கள் மீது தடியடி நடத்திய காவல்துறை மீது நடவடிக்கை எடுக்க கோரி வழக்கறிஞர் ஆரோக்கியதாஸ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
மாணவர்கள் தாக்கப்பட்டதற்கான போட்டோ, வீடியோ ஆதாரங்கள் இருப்பதாகவும் வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் எனவும் அவர் கோரியிருந்தார். இந்த மனு தலைமை நீதிபதி கவுல், நீதிபதி சிவஞானம் முன்பு விசாரணைக்கு வந்தது.
தன்னிடம் போட்டோ, வீடியோ ஆதாரங்கள் இருப்பதாகவும் காவல்துறை மீது நடவடிக்கை எடுக்கவும் வழக்கறிஞர் ஆரோக்கியதாஸ் வாதிட்டார். அதற்கு நீதிபதிகளோ "நாங்களும் இன்று காலையில், நாளிதழ்களில் செய்தியை பார்த்தோம். கல்லூரி மாணவர்கள் டாஸ்மாக் கடையை சூறையாடி உள்ளனர். சட்டத்தை கையில் எடுத்து மாணவர்கள் போராட்டத்தில் இறங்கியதை ஏற்க முடியாது. எனவே இதை அவசர வழக்காக கருதி உடனே விசாரிக்க முடியாது" என்று கூறிவிட்டனர்.