கோவில் பசுக்களை பிராணிகள் நலவாரியம் அடிக்கடி சோதிக்க வேண்டும் – சென்னை ஹைகோர்ட்
சென்னை: கோவில்களில் உள்ள பசு காப்பகங்களின் செயல்பாடுகளை பிராணிகள் நல வாரியம் அவ்வப்போது சோதிக்கலாம் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
தமிழகத்தில் உள்ள அறநிலையத் துறையின் கீழ் வரும் கோவில்களுக்கு பசுக்களை பக்தர்கள் தானமாக வழங்குகின்றனர். இந்த பசுக்களை காப்பகங்களில் வைத்து முறையாக பராமரிக்க வேண்டும்.
முறையான பராமரிப்பு இல்லாததால் அவை இறக்கின்றன. இந்துசமய அறநிலையத் துறையின் கீழ் இயங்கும் கோவில்களில் உள்ள கால்நடைகளை நன்கு பராமரிக்க ஒருங்கிணைந்த திட்டத்தை உருவாக்க தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ராதாராஜன் என்பவர் மனு தாக்கல் செய்தார்.
இம்மனுவை விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் அடங்கிய முதல் பெஞ்ச் பிறப்பித்த உத்தரவில், " கடந்த மாதம் 11 ஆம் தேதி அரசு அதிகாரிகள் கூட்டத்தில் நடந்த நிகழ்வுகள் குறித்த அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.
அதில் கூறப்பட்டுள்ள பரிந்துரைகள் அதிகாரிகளைக் கட்டுப்படுத்தும். அவ்வப்போது சோதனை நடவடிக்கைகளை மேற் கொள்ள வேண்டும் என மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கூறிய பரிந்துரையை நாங்கள் ஏற்கிறோம்.
கோவில்களில் செயல்படும் பசு காப்பகங்களை சோதிக்கும் வகையில் அவ்வப்போது பிராணிகள் நல வாரியம் கண்காணிக்கலாம். இந்த நடவடிக்கைகளுக்கு தன்னார்வ தொண்டர் களின் துணையை பிராணிகள் நல வாரியம் மற்றும் இந்துசமய அறநிலையத் துறை பெற்றுக் கொள்ளலாம்.
நீதிமன்ற உத்தரவு நிறைவேற்றப்பட்டுள்ளதா என்பதை அறிய விசாரணை ஜூன் 9 ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்படுகிறது. அதற்கு நான்கு நாட்களுக்கு முன் பிராணிகள் நல வாரியம் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்" என்று தெரிவித்துள்ளனர்.