பலாத்காரம் செய்தவனுடனேயே சமரசமா? சென்னை ஹைகோர்ட் நீதிபதிக்கு பெண்கள் அமைப்பு எதிர்ப்பு!!
சென்னை: சிறுமி பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளியுடன் சமரசமாக போகுமாறு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியே பரிந்துரைத்து உத்தரவு பிறப்பித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு பெண்கள் அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்து போர்க்கொடி தூக்கியுள்ளன.
2002ஆம் ஆண்டு சிறுமியை பலாத்காரம் செய்த வழக்கில் மோகன் என்பவரை குற்றவாளி என கடலூர் மகிளா நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அவனுக்கு 7 ஆண்டுகள் சிறைதண்டனை, ரூபாய் 5,000 அபராதம் விதித்துத் தீர்ப்பும் அளிக்கப்பட்டது.
இதை எதிர்த்து மோகன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். இதனிடையே பாதிக்கப்பட்ட பெண்ணுக்கும் குழந்தை பிறந்துவிடுகிறது.
அப்போது இந்த வழக்கை விசாரித்த நீதிபதி தேவதாஸ், பிறந்த குழந்தையின் எதிர்காலம் கருதி இந்த வழக்கில் சமரச மையத்தை அணுக வேண்டும்; இதற்கு பாதிக்கப்பட்ட சிறுமி மற்றும் குற்றவாளி தரப்பு வழக்கறிஞர்கள் உதவ வேண்டும்; இருதரப்புக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை உருவாக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
இது பெண்கள் அமைப்பினரிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. பலாத்காரம் செய்தவனுக்கு தண்டனை வழங்குவதற்குத்தான் நீதிமன்றமே தவிர, இதுபோன்ற சமரசத்துக்கு பரிந்துரப்பதற்காகவா நீதிமன்றம் இருக்கிறது? என்றும் அவர்கள் கொந்தளிக்கின்றனர். இத்தகைய உத்தரவுகள் மோசமான முன்னுதாரணங்களை உருவாக்கும் என்றும் அவர்கள் குமுறுகின்றனர்.
அதே நேரத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணின் எதிர்காலம் கருதி நல்ல முன்மாதிரியான உத்தரவை நீதிபதி தேவதாஸ் பிறப்பித்திருப்பதாகவும் ஒருதரப்பினர் கூறுகின்றனர்.