கர்நாடகா அரசை டிஸ்மிஸ் செய்யனும்.. மத்திய அரசுக்கு மதுரை ஆதினம் கோரிக்கை
சென்னை: உச்ச நீதிமன்ற உத்தரவை மதிக்காமல் தமிழகத்துக்கு தண்ணீர்விட மறுக்கும் கர்நாடக அரசை மத்திய அரசு கலைக்க வேண்டும் என்று மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் வலியுறுத்தியுள்ளார்.
கும்பகோணம் அருகே திருப்புறம்பியத்தில் மதுரை ஆதீனத்துக்குச் சொந்தமான கரும்படு சொல்லியம்மை சமேத சாட்சிநாத கோயிலுக்கு வெள்ளிக்கிழமை வந்த அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.
முதல்வர் ஜெயலலிதா பூரண குணமடைந்து, நலமுடன் வாழ வேண்டியும், அவர் மீண்டும் அவருடைய இல்லத்துக்குச் சென்று ஆட்சிக்கட்டிலில் அமர்ந்து பொதுமக்களுக்கு நன்மை செய்யவேண்டும் என்றும் ஆண்டவனை பிரார்த்தனை செய்து கொள்கிறோம் என்றார்.
உச்ச நீதிமன்றம் 4 வாரங்களுக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசுக்கும், தமிழகத்துக்கு செப்டம்பர் 27ம் தேதி வரை 6 ஆயிரம் கனஅடி தண்ணீரை திறந்துவிட கர்நாடக அரசுக்கும் உத்தரவிட்டுள்ளது. முதல்வர் ஜெயலலிதா சட்டப் போராட்டத்தால் இமாலய வெற்றி கண்டுள்ளார் என்று பாராட்டினார்.
கர்நாடக அரசு உச்ச நீதிமன்ற தீர்ப்பை மதிக்காமல் நடந்து வருகிறது. எனவே, அரசியல் சட்ட அமைப்பு பிரிவு 356, 357 ஆகியவற்றை பயன்படுத்தி மத்திய அரசு, கர்நாடக அரசை நீக்க வேண்டும்.
தமிழகத்தில் உள்ள கோயில்களுக்கு சொந்தமான நிலங்கள், மனைகள் ஆகியவை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்தால், அவற்றை மீட்க வேண்டியது அறநிலைத் துறை அதிகாரிகளின் பொறுப்பாகும். ஆக்கிரமித்தவர்களுக்கே தாரைவார்த்துக் கொடுப்பது சட்டத்திற்கு புறம்பானது என்றார் மதுரை ஆதினம்.