தமிழக மீனவர்களின் விடுதலைக்கு மத்திய அரசு முழு நடவடிக்கை எடுக்க வேண்டும் – மதுரை ஆதீனம்
மதுரை: இலங்கையில் தூக்குத்தண்டனை விதிக்கப்பெற்ற 5 மீனவர்களை விடுதலை செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மதுரை ஆதீனம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்த அவரது அறிக்கையில், "தமிழக மீனவர்களுக்கும், இலங்கை கடற்படையினருக்கும் பல்லாண்டு காலமாகவே பிரச்சினை இருந்து கொண்டிருக்கிறது.
இதற்கு ஒரு நிரந்தர தீர்வு காண வேண்டும் என நாம் பல்லாண்டு காலமாக சொல்லி வருகின்றோம். மக்கள் முதல்வர் அம்மாவும் வலியுறுத்தி வருகிறார்.
மற்ற நாடுகளில் போதைப் பொருள் கடத்தியதாக பலருக்கு தூக்குத்தண்டனை விதிக்கப்பெற்றுள்ளது என காரணம் சொல்ல வேண்டாம். மற்ற நாடுகளில் பிரச்சினை வேறு, இலங்கைக்கும், இந்தியாவுக்கும் உள்ள தொடர்புகள் வேறு.
எனவே மத்திய அரசு தலையிட்டு தூக்குத்தண்டனையை ரத்து செய்து, தமிழக மீனவர்களை விடுதலை செய்திட வேண்டும். அதற்கான முழு ஏற்பாடுகளையும் உடனே செய்ய முன்வர வேண்டும் என மத்திய அரசை கேட்டுக் கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.