ஜெயலலிதா அவ்வளவு சொல்லியும் அடங்காத மதுரை அதிமுகவினர்...!
மதுரை: ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு எதிராக இனி போராட்டம் நடத்த வேண்டாம் என்று முதல்வர் ஜெயலலிதா சொல்லியும் கூட மதுரையில் இன்று ஈவிகேஎஸ் இளங்கோவனை எதிர்த்து அதிமுகவினர் போராட்டம் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜெயலலிதா பேச்சை மீறும் வகையில் நடந்து கொண்ட மதுரை அதிமுகவினர் மீது ஜெயலலிதா நடவடிக்கை எடுப்பாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. மதுரைக்காரர்கள் செய்ததை சாக்காக வைத்து வைத்து நாளை இளங்கோவன் செல்லும் இடமெல்லாம் மீண்டும் அதிமுகவினர் போராட்டம் நடத்துவார்களா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
ஜெயலலிதா அவ்வளவு விரிவான அறிக்கை வெளியிட்டும் கூட அதை மீறும் வகையில் அதிமுகவினர் நடந்து கொண்டது சலசலப்பையும் ஏற்படுத்தியுள்ளது. அதிமுகவினரின் இந்த செயலால் சென்னை உயர்நீதிமன்றத்தின் கண்டனத்திற்கு தமிழக காவல்துறை ஆளாக நேரிடும் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.
அந்த ஒரு வார்த்தை
முதல்வர் ஜெயலலிதா, பிரதமர் மோடி சந்திப்பு குறித்து சில வார்த்தைகளைக் கூறி ஈவிகேஎஸ் இளங்கோவன் விமர்சித்துப் பேச அதன் உள்ளர்த்தம் புரிந்து சற்று லேட்டாக ரியாக்ஷனைக் காட்டினர் அதிமுகவினர்.
எங்கு பார்த்தாலும் எரிப்பு
ஒருவர் போராட்டம் நடத்தினால்தான் அதை விட பிரமாண்டமாக நடத்தத் துடிப்பார்களே அதிமுகவினர்.. எனவே .தமிழகம் முழுவதும் விதம் விதமாக, போட்டி போட்டுக் கொண்டு அதிமுகவினர் நடத்தி போராட்டம் வன்முறைக் களமாக மாறிப் போனது.
வளர்மதி கேஸ் வேறு
இந்த நிலையில் இளங்கோவன் மீது வளர்மதி என்ற பெண் ஒரு புகார் கொடுக்க கூடுதல் பரபரப்பானது. வளர்மதி கொடுத்த புகாரின் பேரில் கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குகள் தொடரப்பட, இளங்கோவன் டெல்லி கிளம்பிப் போனார்.
போராட்டங்களை கைவிட ஜெ. உத்தரவு
இந்த நிலையில், போராட்டங்கள் அனைத்தையும் கைவிடுமாறு அதிமுகவினருக்கு ஜெயலலிதா உத்தரவிட்டார். இதையடுத்து போராட்டங்கள் முடிவுக்கு வந்தன.
அடங்காத மதுரை
ஆனால் இன்று இளங்கோவன், சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி மதுரை தல்லாகுளம் காவல் நிலையத்தில் கையெழுத்துப் போட வந்தபோது அதிமுகவினர் குறிப்பாக மகளிர் அணியினர் நடத்திய போராட்டம் முகம் சுளிக்க வைத்து விட்டது.
சரமாரியாக திட்டல்
கையில் துடைப்பத்துடன், இளங்கோவனை சரமாரியாக திட்டியபடி குவிந்து விட்ட அதிமுகவினரால் அந்தப் பகுதியே அல்லோகல்லப்பட்டுப் போனது. பெருமளவில் போலீஸார் குவிக்கப்பட்டனர்.
தலைவர் பேச்சுக்கு மரியாதை இல்லையா
இளங்கோவனுக்கு எதிரான போராட்டங்களை நிறுத்த அதிமுக பொதுச் செயலாளரான ஜெயலலிதா உத்தரவிட்டும் கூட மதுரையில் இன்று நடந்த போராட்டம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜெ.வுக்கு ஐஸ் வைக்கவா
என்னதான் ஜெயலலிதா போராட்டம் வேண்டாம் என்று சொன்னாலும் கூட நாங்கள் இளங்கோவனை மன்னிக்க மாட்டோம் என்று காட்டிக் கொண்டு தாங்கள் ஜெயலலிதா மீது எவ்வளவு பாசமாக இருக்கிறோம் என்று காட்டிக் கொள்வதற்காக நடத்தப்பட்ட போராட்டமாகவே இது பார்க்கப்படுகிறது.
அதிமுகவினர் சொல்லும் விளக்கம்
ஆனால் அதிமுக தரப்பில் என்ன சொல்கிறார்கள் என்றால், அம்மா பேச்சுக்கு மதிப்பு கொடுத்து அமைதியாகத்தான் இருந்தோம். ஆனால் டெல்லியிலும் சென்னையிலும் செய்தியாளர்களிடம் பேசிய ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் ஜெயலலிதாவைப் பற்றி தொடர்ந்து அவதூராக பேசி வருகிறார். நான் சோபன்பாபுவைப் பற்றி பேசினேனா என்றெல்லாம் கேட்டார். அதற்காகத்தான் இந்த போராட்டம் என்கின்றனர்.
மறுபடியும் முதல்ல இருந்தாப்பா...!