ஜல்லிக்கட்டு போராட்டம்: திரண்டு வரும் இளைஞர் படை- அலங்காநல்லூர் பஸ் சேவை நிறுத்தம்!
மதுரையில் இருந்து அலங்காநல்லூர், பாலமேடு செல்லும் பேருந்துகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.
மதுரை: ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டம் தீவிரமடைந்துள்ளதால் மதுரையில் இருந்து அலங்காநல்லூர், பாலமேடு செல்லும் பேருந்துகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. அலங்காநல்லூர் பகுதிக்குள் மேலும் வெளியாட்கள் நுழையாமல் தடுக்க காவல்துறையினர் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளனர்.
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக அலங்காநல்லூரில் நேற்று இரவு விடிய விடிய போராட்டத்தில் ஈடுபட்ட 240 பேரை, போலீசார் இன்று காலை கைது செய்தனர். இதனால் தமிழகம் முழுக்க போராட்டம் பரவியது. கல்லூரி மாணவ, மாணவிகள் வீதிக்கு இறங்கி வந்து போராட்டம் நடத்த தொடங்கியுள்ளனர். இதனிடையே கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க கோரி அலங்காநல்லூரில் கிராம மக்கள், பெண்கள் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இந்தநிலையில் அலங்காநல்லூரில் தொடர்ந்து 2வது நாளாக இன்றும் ஏராளமான இளைஞர்கள், பெண்கள் என பலரும் திரண்டு ஜல்லிக்கட்டு தடையை நீக்க வலியுறுத்தி, அறப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அலங்காநல்லூர் மற்றும் பாலமேடுக்கு தற்காலிகமாக போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.
பொதுமக்கள் போராட்டம் காரணமாக அலங்காநல்லூர் நுழைவு வாயிலை காவல்துறையினர் மூடினர். அலங்காநல்லூர் பகுதிக்குள் மேலும் வெளியாட்கள் நுழையாமல் தடுக்க காவல்துறையினர் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளனர். தனிச்சியம், சிக்கந்தர்சாவடி உள்ளிட்ட பகுதிகளில் தடுப்பு வேலி அமைத்து காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.