அத்வானி பைப் வெடிகுண்டு வழக்கு...முகமது ஹனிபாவுக்கு நிபந்தனை ஜாமீன்
அத்வானி பைப் வெடிகுண்டு வழக்கில் தொடர்புடைய முமது ஹனிபாவுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரை: பாஜக மூத்த தலைவர் அத்வானியைக் கொல்ல கடந்த 2011ம் ஆண்டு மதுரை அருகே திருமங்கலத்தில் பைப் வெடிகுண்டு வைக்கப்பட்டது தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள முகமது ஹனிபாவுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
பாரதீய ஜனதா மூத்த தலைவர் அத்வானி கடந்த 2011-ம் ஆண்டில் ரதயாத்திரை மேற்கொண்டார். அவர் மதுரைக்கு வந்து அங்கிருந்து தென் மாவட்டங்களுக்கு புறப்பட்டார்.
இந்த சமயத்தில் அவரது யாத்திரை செல்லும் வழியான திருமங்கலம் ஆலம்பட்டி அருகே பாலத்தின் அடியில் வைக்கப்பட்டிருந்த பைப் வெடிகுண்டு கண்டெடுக்கப்பட்டது. இந்த சம்பவத்தை அடுத்து கொலை முயற்சி வழக்குபதிவு செய்யப்பட்டு, சிறப்பு பிரிவு போலீசார் விசாரணை செய்து வந்தனர்.
இந்த வழக்கில் போலீஸ் பக்ருதீன், பிலால் மாலிக், முகமது அனீபா என்ற தென்காசி அனீபா, அப்துல்லா என்ற அப்துல் ரகுமான், இஸ்மத், ஹக்கீம் என்ற கருவா ஹக்கீம் ஆகிய 6 பேர் முக்கிய குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டனர்.
இந்த வழக்கில் தொடர்பாக முகமது ஹனிபா என்ற தென்காசி ஹனிபா சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில் முகமது ஹனிபா ஜாமீன் கேட்டு உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி முரளிதரன் நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். மேலும் சென்னை மெட்ரே பாலிடன் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி கையெழுத்திட உத்திரவிட்டார்.