தமிழகத்தில் எய்ம்ஸ்: டிச. 31க்குள் இடம் தேர்வு செய்ய மத்திய அரசுக்கு ஹைகோர்ட் உத்தரவு!
தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை எங்கே அமையப் போகிறது என்று டிசம்பர் 31ம் தேதிக்குள் அறிவிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி உத்தரவிட்டுள்ளது.
மதுரை : தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை எங்கே அமையப் போகிறது என்று டிசம்பவர் 31ம் தேதிக்குள் இடத்தை அறிவிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு ஹைகோர்ட் மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை எங்கே அமைகிறது என்று மத்திய அரசு வெளிப்படையாக தெரிவிக்கக் கோரி மதுரையைச் சேர்ந்த கே.கே. ரமேஷ் என்பவர் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகளிடம் மத்திய அரசுக்கு தமிழக அரசு முழு ஒத்துழைப்பு தருவதாக வழக்கறிஞர் தெரிவித்தார்.
தமிழகத்தில் பெருந்துறை, செங்கல்பட்டு, மதுரை, தஞ்சாவூர், புதுக்கோட்டை உள்ளிட்ட இடங்கள் தேர்வு செய்யப்பட்டு 2014ம் ஆண்டே அனுப்பப்பட்டுள்ளது. 5 இடங்கள் குறித்து கூடுதல் தகவல்களும் இந்த ஆண்டின் தொடக்கத்தில் அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக ஏற்கனவே தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளதில் கூறியுள்ளது.
இந்நிலையில் இன்று வழக்கை விசாரித்த நீதிபதிகள் மத்திய அரசு எப்போது எய்ம்ஸ் மருத்துவமனைக்கான இடத்தை அறிவிக்கும் என்று கேள்வி எழுப்பினர். அதற்கு தமிழக அரசு அளித்துள்ள பட்டியலில் உள்ள 5 இடங்களையும் மத்திய குழு ஆய்வு செய்து எந்த இடத்தில் மருத்துவமனை அமைப்பதற்கேற்ப வசதிகள் உள்ளன என்ற பார்வையிட்டு சென்றுள்ளனர். விரைவில் இடம் அறிவிக்கப்படும் என்று மத்திய அரசு தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.
இதனை ஏற்க மறுத்த நீதிபதிகள் தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை எங்கே அமைகிறது என்பதை கேட்டு பிற்பகலுக்குள் நீதிமன்றத்தில் தெரிவிக்குமாறு உத்தரவிட்டனர். இதனையடுத்து வழக்கு பிற்பகலில் விசாரணைக்கு வந்த போது மத்தியக் குழு மீண்டும் ஆய்வு செய்ய 2 மாதம் அவகாசம் கேட்டனர்.
இதனை ஏற்ற நீதிபதிகள் 2 மாதத்திற்குள் மத்திய குழு ஆய்வு செய்து டிசம்பர் மாதம் 31ம் தேதிக்குள் தமிழகத்தில் எந்த இடத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ளது என்பதை இறுதி செய்து, ஜனவரி 1ம் தேதி அறிவிப்பை வெளியிட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளனர்.