அலங்காநல்லூருக்கு பைக்கில் வந்த கலெக்டர்.. உள்ளே விடாமல் மக்கள் தடுத்து அனுப்பினர்!
மதுரை கலெக்டர் வீரராகவ் ராவ் பைக் மூலம் அலங்காநல்லூர் விரைந்தார். ஆனால் மக்கள் பாதியிலேயே அவரை தடுத்து திருப்பி அனுப்பி விட்டனர்.
மதுரை: அலங்காநல்லூர் மக்களைச் சந்திக்க மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் வீரராகவ ராவ் மோட்டார் சைக்கிளில் அலங்காநல்லூர் வந்தார். ஆனால் அவரை தடுத்து நிறுத்தி மக்கள் திருப்பி அனுப்பியதால் அவர் பெரும் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றார்.
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் கடும் கொதிப்புடன் உள்ளது. அங்கு இன்று அரசு நடத்துவதாக கூறியிருந்த ஜல்லிக்கட்டு மக்களின் போராட்டம் காரணமாக ரத்தாகி விட்டது. இதனால் முதல்வர் ஓ.பன்னீர் செல்வமும் அங்கு வர முடியாமல் சென்னை திரும்பி விட்டார்.
இந்த நிலையில் மக்களிடம் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த ஆட்சித் தலைவர் வீரராகவ ராவ் அலங்காநல்லூர் புறப்பட்டார். மோட்டார் சைக்கிளில் அவர் அலங்காநல்லூர் புறப்பட்டார். ஆனால் ஊருக்கு முன்பாகவே அவரை மக்கள் தடுத்து நிறுத்தினர். இதையடுத்து நடந்து வந்தார் கலெக்டர். ஆனால் நிரந்தரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது என்ற உத்தரவு வந்தால் வாருங்கள், இல்லாவிட்டால் வராதீர்கள் என்று மக்கள் கூறி தடுத்து நிறுத்தினர்.
கலெக்டர் எவ்வளவு கூறியும் மக்கள் அதைக் கேட்க தயாராக இல்லை. இதையடுத்து கலெக்டர் வீரராகவ ராவ் ஏமாற்றத்துடன் மதுரை கிளம்பிச் சென்றார்.