மாற்றுத்திறனாளிகள் தடகள போட்டியில் 3 தங்கம் வென்று சாதனை...மதுரை விவசாயி மகனுக்கு உற்சாக வரவேற்பு!
கனடாவில் நடந்த உலக அளவிலான உயரம் குன்றியவர்களுக்கான விளையாட்டு போட்டியில் 3 தங்கம் வென்ற மதுரையைச் சேர்ந்த கணேஷனுக்கு சொந்த ஊரில் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
மதுரை : உலக அளவிலான உயரம் குன்றியவர்களுக்கான விளையாட்டுப் போட்டியில் 3 பிரிவுகளில் தங்கம் வென்ற விவசாயியின் மகன் கணேஷனுக்கு ஊர் மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
குள்ளமான மாற்றுத் திறனாளிகளுக்கான, 17வது உலக அளவிலான விளையாட்டுப் போட்டிகள், கனடாவில் நடந்தது. 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் இந்தப் போட்டியில், இந்த ஆண்டு 62 நாடுகளை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் பங்கேற்றனர். தடகளம், நீச்சல், கால்பந்து உள்ளிட்ட 10 பிரிவுகளில் போட்டிகள் ஆகஸ்ட் 4ம் தேதி முதல் ஆகஸ்ம் 13 வரை போட்டிகள் நடந்தது.
இந்த சர்வதேச போட்டியில் இந்தியாவில் இருந்து, 18 வீரர்கள் பங்கேற்றனர். இவர்களில் மதுரையை சேர்ந்த எம்.இ. பட்டதாரி மனோஜ், உசிலம்பட்டியை சேர்ந்த கணேசனும் பங்கேற்றனர். மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே மாதரை என்ற கிராமத்தை கணேசன் இந்தப் போட்டிகளில் விளையாடி குண்டு எறிதல், தட்டு எறிதல், ஈட்டி எறிதல் பிரிவுகளில் பங்கேற்றார். இந்த மூன்றிலுமே தங்கப்பதக்கம் வென்று சாதனையும் படைத்துள்ளார் கணேசன்.
பதக்கங்களுடன் இன்று தனது சொந்த ஊரான உசிலம்பட்டி அருகே மாதரை கிராமத்திற்கு வந்த கணேசனுக்கு வெடி வெடித்து, தாரைதப்பட்டம் முழங்க உறவினர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பாராஒலிம்பிக் போட்டியில் வென்ற மாரியப்பனுக்கு அளித்த உதவிகள் போல தனக்கும் நிதி வழங்கி ஊக்கப்படுத்தினால் மேலும் பல போட்டிகளில் பங்கேற்று தமிழகத்திற்கு பெருமை சேர்ப்பேன் என கணேஷன் தெரிவித்துள்ளார்.