பிற மாவட்டங்களில் செயல்பட பி.ஆர்.பிக்கு அனுமதி.. சகாயம் கமிட்டிக்கு மேலும் 8 வார அவகாசம்!
மதுரை: பி.ஆர்.பி. கிரானைட்ஸ் நிறுவனம், மதுரை மாவட்டத்தைத் தவிர பிற மாவட்டங்களில் செயல்பட மதுரை உயர்நீதிமன்றக் கிளை அனுமதித்துள்ளது.
மதுரை மாவட்டத்தில் பெருமளவில் கிரானைட் மோசடியில் ஈடுபட்டதாக எழுந்த சர்ச்சையைத் தொடர்ந்து பி.ஆர்.பி. கிரானைட்ஸ் நிறுவனத்திற்கு சீல் வைக்கப்பட்டது. அதன் அனைத்து அலுவலகங்கள், குவாரிகள் இழுத்து மூடப்பட்டன. அதன் உரிமையாளர் பி.ஆர். பழனிச்சாமி உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டனர்.
தற்போது இந்த மோசடி தொடர்பாக ஐஏஎஸ் அதிகாரி சகாயம், சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி விசாரணை நடத்தி வருகிறார். இந்த நிலையில், பி.ஆர்.பி நிறுவனம் மதுரையைத் தவிர பிற இடங்களில் செயல்பட மதுரை உயர்நீதிமன்றக் கிளை அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக அந்த நிறுவனம் உயர்நீதிமன்றக் கிளையில் மனு செய்திருந்தது. அதை விசாரித்த உயர்நீதிமன்ற பெஞ்ச், பி.ஆர்.பி. நிறுவனம் வங்கிகளின் கணக்குகளை பயன்படுத்திக்கொள்ளவும் அனுமதி அளித்துள்ளது. பிற மாவட்டங்களில் முறைகேடு புகார் இல்லாத கிரானைட் குவாரிகளில் பணிகளை தொடங்கவும் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. மேலும் பி.ஆர்.பி. நிறுவனம் கிரானைட் கற்களை ஏற்றுமதி செய்ய விதிக்கப்பட்டிருந்த தடையையும் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.
இது பி.ஆர்.பி. நிறுவனத்திற்கு சற்று நிம்மதியை அளிக்கும் என்று தெரிகிறது.
டிராபிக் வழக்கு ஒத்திவைப்பு
கிரானைட் முறைகேடு குறித்து சமூக சேவகர் டிராபிக் ராமசாமி தொடர்ந்த வழக்கின் விசாரணையை சென்னை உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
தமிழகத்தில் நடைபெற்ற கிரானைட் முறைகேடு குறித்து விசாரணை கோரி டிராபிக் ராமசாமி உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பிரதிவாதிகளாக சேர்க்கப்பட்டுள்ளன. இந்த வழக்கில் மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சகம் 3 வாரத்தில் பதிலளிக்க உத்தரவிடப்பட்டு இருந்தது.
சகாயம் கோரிக்கை ஏற்பு
இந்நிலையில், இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, கிரானைட் குவாரிகளில் தொடர்ந்து ஆய்வு நடப்பதால் 8 வாரம் அவகாசம் வேண்டும் என ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இந்த கோரிக்கையை ஏற்ற நீதிபதி, வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை மார்ச் 12ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்