”பெற்றோர் இல்லாமல் பதிவுத் திருமணம் கூடாது” – மதுரை ஹைகோர்ட் விளக்கம் கேட்டு உத்தரவு
மதுரை: தமிழ்நாட்டில் பதிவாளர் அலுவலகம், காவல் நிலையம் மற்றும் கோயில்களில் மணமக்களின் பெற்றோரும் இருந்தால் மட்டுமே திருமணங்களை பதிவு செய்ய வேண்டும் என்று உத்தரவிட கோரிய வழக்கில் பதில் அளிக்குமாறு உள்துறை செயலாளர், டிஜிபி, பதிவுத்துறை ஐஜி ஆகியோருக்கு உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதிகள் தனபாலன் மற்றும் வேலுமணி ஆகியோர் அடங்கிய அமர்வு இதற்கான உத்தரவை பிறப்பித்தது.
தமிழகத்தில் சமீபத்தில் கவுரவக் கொலைகள், காதல் திருமணங்கள் செய்து கொள்பவர்களின் பெற்றோர் தற்கொலைகள் , சாதிய வன்முறைகள் காதலர் தற்கொலைகள் அதிகரித்துள்ளதாக மனுதாரர் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்து திருமண சட்டபடி பெண்ணின் திருமண வயது 18 ஆகவம் ஆணின் திருமண வயது 21 ஆகவும் உள்ளதை சுட்டிக்காட்டிய மனுதாரர் இந்த வயது கல்விக்கு பக்குவப்பட்ட வயதாக உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.
திருமணம் செய்துகொள்ள இந்த வயது ஏற்புடையதாக இல்லை என்றும் இந்த வயதில் திருமணம் செய்து கொள்வோர் விரைவில் விவாகரத்து செய்து கொள்வதாகவும் கூறியுள்ளார்.
எனவே இது போன்ற சம்பவங்களை தடுக்க பதிவாளர் அலுவலகம் காவல் நிலையம் மற்றும் கோயில்களில் திருமணம் செய்யும் போது மணமக்களின் பெற்றோர்களின் அனுமதி பெற்றே திருமணத்தை பதிவு செய்ய வேண்டும் என்று மனுதாரர் கோரியிருந்தார்.
இவ்வழக்கினை விசாரித்த மதுரை உயர்நீதிமன்றக் கிளை இம்மனுவிற்கு பதில் கோரி உத்தரவு பிறப்பித்துள்ளது.