மதுரை: ஆசிரியர் மனைவிக்கு ஒரே பிரசவத்தில் ”ஜாக்பாட்”– 4 குழந்தைகள் பிறந்ததால் மகிழ்ச்சி!
மதுரை: மதுரை அரசு மருத்துவமனையில் நேற்று பெண் ஒருவருக்கு ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள் பிறந்துள்ள சம்பவம் பெரும் மகிழ்ச்சியையும், ஆச்சரியத்தினையும் ஏற்படுத்தியுள்ளது.
மதுரை எல்லீஸ்நகரை சேர்ந்தவர் அகமத். அரசுப் பள்ளி ஆசிரியர். இவரது மனைவி சஹிதா. இவர்களுக்கு ஏற்கெனவே ஆண், பெண் குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில், செயற்கை கருத்தரித்தல் மூலம் சஹிதா கர்ப்பம் அடைந்தார். எட்டு மாத கர்ப்பிணியான நிலையில், ஞாயிற்றுக்கிழமை அவர் மதுரை அரசு மருத்துவமனையில் பிரசவத்துக்காக சேர்க்கப்பட்டார்.
அவருக்கு அறுவை சிகிச்சை மூலம் திங்கள்கிழமை காலையில் 2 பெண், 2 ஆண் என 4 குழந்தைகள் பிறந்தன. குழந்தைகள் அனைத்தும் 1.62 முதல் 1.09 கிலோ கிராம் எடையுடன் இருப்பதாக மருத்துவர்கள் கூறினர்.
குறைமாதத்தில் குழந்தைகள் பிறந்ததை அடுத்து தீவிர சிசு நலப் பிரிவில் குழந்தைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.
சஹிதாவுக்கு ரத்த அழுத்தமிருந்ததால் அவருக்கு கர்ப்பகால அதிதீவிர திட்டத்தின் கீழ் சிகிச்சை அளிக்கப்பட்டது. ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள் பிறந்ததைக் கேள்விப்பட்ட மற்ற நோயாளிகள் குழந்தைகள் நலப் பிரிவுக்கு சென்று குழந்தைகளை ஆர்வமுடன் பார்த்தனர்.