காமெடி ஜங்சனா.. 'காம நெடி' ஜங்சனா
காமெடி ஜங்சன் என்ற பெயரில் சன்டிவியில் இரவு 10.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது இது காமெடி ஜங்சன் என்பதை விட காம நெடி நிறைந்த ஜங்சனாவே உள்ளது என்பது நேயர்களின் கருத்தாக உள்ளது.
சென்னை: காமெடி ஜங்சன் நம்ம வாழ்க்கையில இல்லவே இல்லை டென்சன் என்று நல்லாத்தான் ஆரம்பிக்கிறாங்க. ஆனா ஆதவனும்,மதுரை முத்துவும் இணைந்து கூறும் அசைவ ஜோக்குகள் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் பெண்களை மட்டுமல்லாது பார்வையாளர்களையும், வீட்டில் நிகழ்ச்சியை ஆர்வத்துடன் ரசிப்பவர்களையும் நெளிய வைக்கிறது.
விஜய் டிவியைப் பார்த்து காப்பியடித்து பல நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். அதே போலவே காமெடி ஜங்சன் இப்போது காம நெடி ஜங்சனாக வருகிறது. சிறுவர்கள் பார்க்கும் இந்த நிகழ்ச்சியில் காம நெடி வசனங்கள் பேசப்படுகிறது என்ற குற்றச்சாட்டு உள்ளது.
காமெடி ஜங்சன்
சன் தொலைக் காட்சியில் இரவு 10.30 ஸ்லாட்டை நிரப்புவதற்காக புதிதாக ஒரு நிகழ்ச்சி அவசர கோலத்தில் ஆரம்பித்த நிகழ்ச்சிதான் காமெடி ஜங்சன். ஆரம்பத்தில் ஸ்ரீமன், மதுமிதாவை வைத்துதான் ஆரம்பித்தார்கள். அது சரிப்பட்டு வரவில்லை. சம்பளம் கொடுத்து கட்டுபடியாகவில்லையோ என்னவோ
மதுரை முத்து
மதுரை முத்துவையும் ஆதவனையும் இணைத்து எப்படியோ கொண்டு போய்க்கொண்டிருக்கின்றனர்.
திறமை இருப்பவர்கள் வந்து கலந்து கொள்ளலாம் என்ற விளம்பரத்தைப் பார்த்து பலர் வந்தார்கள். புதியவர்களாக இருந்தும் பெண்கள் நன்றாகவே பேசுகிறார்கள்.
நெளியும் பெண்கள்
நிகழ்ச்சியை பங்கேற்பவர்களை கலாக்கிறேன் என்ற பெயரில் மதுரை முத்துவும் ஆதவனும் அடிக்கிற லூட்டியில் பலரும் தங்களின் ஜோக்குகளை பேச முடியவில்லை. நிகழ்ச்சிக்கு வரும் எல்லா பெண்களையும் கலாய்ப்பதுதான் இவர்கள் வேலையாக இருக்கிறது. இவர்கள் கலாய்ப்பையும் மீறி சிலர் கஷ்டப்பட்டு பேசிவிட்டு செல்கிறார்கள். அதுவும் மதுரை முத்து பெண் வேஷம் போட்டு அடிக்கிற லூட்டிகள் காம நெடி ரகம் என்கின்றனர் நிகழ்ச்சியைப் பார்த்தவர்கள்.
இரட்டை அர்த்த வசனங்கள்
இந்த இரட்டையர்களின் இரட்டை அர்த்த வசனத்திற்கு ஈடு கொடுப்பவர்களுக்கு மட்டுமே அடுத்தடுத்த நிகழ்ச்சிகளில் பேச வாய்ப்பு கொடுக்கப்படுகிறதாம். எது எப்படியோ ஞாயிறு காலை நேரத்தில் சண்டே கலாட்டா நடத்தும் மதுரை முத்து, இரவு நேரத்தில் ஏன் இப்படி காம நெடி வசனங்களை பேசி இம்சிக்கிறார் என்பதே பலரின் கேள்வியாக உள்ளது.